Friday, December 30, 2011

வரவு எட்டணா செலவு பத்தணா !

1967 ஆம் ஆண்டு கே .பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான " பாமா விஜயம் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . கவிஞர் கண்ணதாசன் இந்தப்பாடலை எழுதியுள்ளார் . T.M.செளந்தர்ராஜன் , சுசீலா மற்றும் L .R .ஈஸ்வரி இந்தப்பாடலைப் பாடியுள்ளனர் .


பாடல் வரிகள் இன்றைக்கும் ஓரளவு பொருந்தும் . இன்றைய நிலையில் மாதம் 8000 ரூபாய் வருமானம் வந்தால் 10000 ரூபாய் செலவு வருகிறது . ஆடம்பரத்தை துறந்து எளிய வாழ்க்கை வாழ முடிந்தால் 8000 ரூபாயே அதிகம் தான் . மாதம் ரூபாய் 3000 சம்பாதிப்பதே சாதனை என்ற நிலையில் இருக்கும் குடும்பங்களும் நம் நாட்டில் தான் இருக்கின்றன என்பதை மறந்து விட முடியுமா ?

நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது !
அய்யா நிம்மதி இருக்காது !

அளவுக்கு மேலே ஆசை வந்தால் உள்ளதும் நிலைக்காது !
அம்மா உள்ளதும் நிலைக்காது !

மேலும் படிக்க :

2011 ம் வருடமும் சாமானியனும் ! 

ஜம்புலிங்கமே ஜடாதரா ...! 
.................................................................................................................................................................... 

Wednesday, December 28, 2011

2011 ம் வருடமும் சாமானியனும் !

ஒரு சாமானியனின்  கவலைகள் என்பதா ,கேள்விகள் என்பதா ,ஆதங்கம் என்பதா ,இயலாமை என்பதா அல்லது அறியாமை என்பதா தெரியவில்லை .

  • ஆட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன . ஆனால் , அதிகார மையங்களின் பிடியிலிருந்து மக்கள் இன்னும் வெளியே வரமுடியவில்லை . பிரதமர் ,முதல்வர் போன்ற மேல் நிலை ஊழியர்களிலிருந்து அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை சாமானிய மக்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவே இருக்கின்றனர் . மக்களின் வரிப்பணம் தான் தனக்கு சோறு போடுகிறது என்ற மனநிலை அவர்களுக்கில்லை . சாமானியர்கள் மீது அதிகபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பவர்கள் காவல்துறையைச்  சேர்ந்தவர்கள் . பொய் வழக்கு ,லாக்கப் சித்திரவதை , தடியடி , துப்பாக்கிச்சூடு என்று சாமானியர்கள் மீது பாயும் அதிகாரத்தின் நீளம் அதிகம் . உலகமே அதிகார மையங்களின் கட்டுப்பாட்டிலே இருப்பதாகத் தெரிகிறது . உண்மையான மக்களுக்கான ஆட்சி எங்குதான் நடைபெறுகிறது ? யாராவது சொல்லுங்களேன் .

  •  லஞ்சம் ,ஊழல் என்பது மனித விலங்குகளின் ஜீனிலியே பதிந்துபோன விசயமாக மாறிவிட்டது . லஞ்சம் , ஊழல் குறைவான நாடு வேண்டுமானால் உலகில் இருக்கலாம் .ஆனால் , லஞ்சம் ஊழலே இல்லாத நாடு என்று ஒன்று உலகில் இருக்க வாய்ப்பில்லை.

  • அண்ணா ஹசாரே போராட்டத்தை ஒரு சில ஊடகங்கள் காந்தியவழிப் போராட்டம் , மக்களுக்கான போராட்டம் என்று சொல்கின்றன . இல்லை ,இது கார்பரேட் கம்பெனிகளின் போராட்டம் , மத்திய தர மக்களின் உடல் நோகா மெழுகுவர்த்தி போராட்டம் என்று வேறு சில ஊடகங்கள் ஏசுகின்றன . அதிகம் படிப்பறிவில்லாத என்னைப்போன்ற சாமானியர்கள்  எதை நம்புவது ?
  • அண்ணா ஹசாரே, எத்தனை முறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினாலும் வரிந்து கட்டிக்கொண்டு  ஆதரவு தரும் ஊடகங்கள் , இரோம் சர்மிளா , ஓடிஸா போஸ்கோ , பழங்குடியினர் ,கூடங்குளம் மற்றும் பல  பிரச்சனைகள் குறித்து வாயே திறக்காமல் இருப்பது நம்மை யோசிக்க வைக்கிறது .

  • சுயஒழுக்கம் என்பதை சட்டங்களால் உருவாக்க முடியாது . சிறந்த கல்விமுறையாலும் , சிறந்த குழந்தை வளர்ப்பாலும் மட்டுமே சுய ஒழுக்கத்தை உருவாக்க முடியும் . ஆனால் , இன்றைய கல்விமுறை கண்ணை மறைத்து , கடிவாளம் பூட்டிய குதிரையைப் போல கொள்ளுக்கும் ,புல்லுக்கும் ஓடுவது   போலவே உள்ளது .

  • இந்த வருடம் நடந்த ஆட்சிமாற்றம் எல்லோருக்கும் மகிழ்ச்சியே . பலன் ??? ஒரு நாடக நடிகர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார் , ஒரு சர்வாதிகாரி பதவியில் அமர்ந்திருக்கிறார் அவ்வளவுதான் . மக்களைப்பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் பிடிவாதமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன . பழையபடி காவல்துறை சர்வாதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது . சே ! இந்த முறையும் நம்ம ஓட்டு வேஸ்டு தானா ? எப்ப தான் நாம் போடும் ஓட்டுக்கான பலனை அனுபவிக்கப் போகிறோமோ ?

  • 50 ஆண்டுகளுக்கும் மேலாக அடக்குமுறைக்கு ஆளான தெற்கு சூடான் ஜூலை 9 , 2011 அன்று தனிநாடாக உதயமானது . ஈழம் எப்போது தனி நாடாவது ? சீனாவின் பிடியிலிருந்து திபெத்தை யார் மீட்டெடுப்பது ? ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை எப்படிப் போக்குவது ? உலகெங்கும் நடக்கும் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை யார் தட்டிக்கேட்பது ?

  • இதுவரைக்கும் அணுஉலை பற்றிக் கவலைப்படாத நாடுகள் கூட புகுசிமா நிகழ்விற்குப் பிறகு அணுஉலை பற்றி அச்சமும் ,அணுவைப் பயன்படுத்துவதில் தயக்கமும் கொண்டிருக்கின்றன . எப்படிப் பார்த்தாலும் அணுசக்தி பூமிக்கு ஆபத்தானது தான் . 20 ஆண்டுகளுக்கும் மேலான கூடங்குளம் மக்களின் போராட்டத்தை கேலிப்பொருளாக்கி 5 மாவட்ட மக்களுக்காக கவலைப்படாமல் , 14000 கோடிக்காக மட்டுமே கவலைப்படுகிறது தற்போதைய காங்கிரஸ் அரசு . இதே காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையுடன் ஒப்பிடும் போது இந்த 14000 கோடி மிகவும் சொற்பமானது . 

  • தொடர்ந்து இயற்கைக்கு எதிராக செயல்படும்வரை நமக்கு வீழ்ச்சிதான் . நமது செயல்பாடுகள் இயற்கையின் அனைத்து கூறுகளையும் பாதித்துவிட்டன . நம்மால் இயற்கையைக் கட்டுப்படுத்தவோ , வெற்றி கொள்ளவோ எப்போதும் முடியாது . விதவிதமான நோய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன . குறிப்பாக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கட்டிகள் மற்றும் புற்றுநோய்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன . தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றன . மற்ற நாடுகளில் தடை செய்யப்பட மருந்துகள் இப்போதும் விற்பனை செய்யப்படுகின்றன . காரணம் ?

  • பிரிவினைவாத அரசியலின் பலிகடாவாக எப்போதும் இருப்பது சாமானிய மக்கள்தான் . ஜாதி அரசியல் ,மத அரசியல் , கட்சி அரசியல்  என்று பிரிவினைகளை உருவாக்கி தங்கள் ஆதாயத்திற்கு சாதாரண மக்களை முட்டாள்களாக்கி , உணர்ச்சிவசப்படவைத்து குளிர்காய்வதுதான் அரசியல்வாதிகளின் வேலையாகிவிட்டது . தமிழ்நாட்டுக்கும் , கேரளாவுக்கும் இடையிலான பிரச்சனையை தமிழர்களுக்கும் ,மலையாளிகளுக்கும் இடையிலான பிரச்சனையாக மாற்றிய பெருமை இரு மாநில அரசியல் கட்சிகளையும் , ஊடகங்களையுமே சேரும் . முன்பு , காவிரிப் பிரச்சனையில் கர்நாடகாவில் இருந்த தமிழர்கள் தாக்கப்பட்டார்கள் . கர்நாடகாவில் இருந்த தமிழர்கள் , தமிழர்கள் என்று அடையாளப்படுத்தவே பயப்பட்டனர் . ஆனாலும் , இன்றும் எத்தனையோ தமிழர்கள் பிழைப்புக்காக அங்கு வாழ்கின்றனர் . அதே பிழைப்புக்காக கர்நாடாக மக்களில் சிலர் இங்கும் வாழ்கின்றனர் . அதுபோல , இன்று சண்டை கட்டிக்கொண்டாலும் நாளை மலையாளிகள் தமிழ்நாட்டிலும் , தமிழர்கள் கேரளாவிலும் பிழைப்புக்காக வாழத்தான் போகின்றனர் .

  • இலக்கியம் படிக்க முயற்சி செய்யும் என்னைப்போன்ற பட்டிக்காட்டனுக்கு நிறைய கேள்விள் எழுகின்றன . அரசியல் கட்சிகள் எந்தப்பிரச்சனையிலும் ஒற்றுமையாக செயல்படுவதில்லை என்று விமர்சிக்கும் எழுத்துலகம் , அரசியல் கட்சிகளை விட அதிக பிரிவினைகளைக் கொண்டிருக்கிறது . எவ்வளவு முக்கிய பிரச்சனையாக இருந்தாலும் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்கின்றனர் ; நம் மண்டை காய்கிறது . இலக்கியம் என்றாலே பொது தானே அப்புறம் ஏன் பெண் இலக்கியம் , ஆண் இலக்கியம் , தலித் இலக்கியம் என்று ஏகப்பட்ட பிரிவினைகள் . இவ்வளவு வேறுபாடுகளை வைத்துக்கொண்டு  இந்த பிரிவினை இலக்கியங்களால் சமத்துவத்தை உருவாக்க முடியுமா ? முதலில் படைப்பு தான் பேசப்பட வேண்டும் . பிறகு தான் அதை யார் எழுதியது என்று பார்க்க வேண்டும் .பிரிவினைகளைப்  புறந்தள்ளி உலக இலக்கியங்களுக்கு இணையான தரமான இலக்கிய படைப்புகள் உருவாக்குவதை நோக்கியும் , சமூகத்தை சீர்படுத்துவதில் இலக்கியத்திற்கு இருக்கும் மாபெரும் பங்கை உணர்ந்தும் எழுத்துலகம் பயணிக்குமா ? 

  • சினிமாவில் இன்னும் அருவாள் தூக்கும் கும்பல் இடம்பெறுகிறது . அதிகபட்ச வன்முறைக்காட்சிகள் பார்ப்பவர்களின் மனநிலையை வெகுவாக பாதித்து மனதை மரத்துப்போகச் செய்கின்றன . சமீபகாலப் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் திரைக்கதையின் வேகத்தைக் குறைக்கின்றன . கண்டிப்பாக 5 கும் மேற்பட்ட பாடல்கள் இருக்க வேண்டும் என்ற விதியை விட்டுக்கொடுக்கும் மனநிலையில் நிறைய இயக்குனர்கள் இல்லை . கதையை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களும் கடந்த 2 ஆண்டுகள் ஓரளவு வரவேற்பைப் பெற்று இருக்கின்றன . இது நல்ல விசயம் . " ஆரணிய காண்டம் " , "எங்கேயும் எப்போதும் " மற்றும் " பாலை"  இந்த ஆண்டின் சிறந்த படங்களாக இருக்கக்கூடும் .

  • இந்த ஆண்டு , உலக சாம்பியன் கபடிப்  போட்டியில்  ஆண்கள் பிரிவிலும் ,பெண்கள் பிரிவிலும் உலகக்கோப்பைகளை வாங்கி ஆட்டோவில் பயணித்து வீடு வந்து சேர்ந்தனர் ,இந்திய கபடி அணியினர் . மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது இந்தியா . எவ்வளவு பெரிய பிரச்சனையையும் மறக்கவைக்கும் சக்தி கிரிக்கெட் விளையாட்டிற்கு உள்ளது .பெருமளவு மக்களின் பிடித்தமான பொழுதுபோக்காக இருப்பதும் அதுவே . இது அரசியல் தொழிலில் ஈடு பட்டுள்ளவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது .முதல் முறையாக பார்முலா ஒன் கார் பந்தயம் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது . மற்ற விளையாட்டுகள் பற்றி ஊடகங்களுக்கும் , நமக்கும் எந்தவித  கவலையுமில்லை . ஒலிம்பிக் பதக்கம் ???

  • ஒவ்வொரு ஆண்டும் விளம்பரங்கள் வாயிலாக நம் மூளை சலவை செய்யப்படுவதன் மூலம் நமது வீடுகளில் இறக்குமதியாகும் விதவிதமான  பொருட்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் . இந்தியா மிகப்பெரிய வணிக சந்தையாக மாறிவிட்டது . சிறிய ,பெரிய எந்தக் குடும்பமாக இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் உணவிற்காக செய்யும் செலவைவிட மற்ற பொருட்கள் வாங்கவே அதிகம் செலவு செய்கிறது . 

  • இந்த ஆண்டில் தான் அனந்த பத்மநாபசாமி கோவில் , ஒரே வாரத்தில் உலகின் பணக்கார கடவுளாக மாறியது . தங்கம் மட்டும் இன்று ஓட்டைக் காலணா போல புழக்கத்தில் இல்லாமல் இருந்திருந்தால் தங்கத்திற்கு எந்த மதிப்பும் இருந்திருக்காது . தங்கம் , பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து புழக்கத்தில் இருப்பது மிகப்பெரிய சரித்திர நிகழ்வு . இன்று ,சாமானியன் தங்கம் வாங்க நினைப்பதே பெரிய சாதனை தான் . 

  • காலம், கொண்டாட்டத்திற்கு இடம் ஒதுக்கும்போதே  துயரங்களுக்கும் ,மரணங்களுக்கும் சேர்த்தே இடம் ஒதுக்குகிறது . மார்ச் 11 ,2011 அன்று ஜப்பானை உலுக்கிய சுனாமி இந்த ஆண்டின் துயரமாக பதிவாகியுள்ளது . ஜப்பானுக்கு சுனாமி ஒன்றும் புதிதல்ல . புகுசிமாவில் இருந்த அணுஉலைகள் பாதிக்கப்பட்டு , கதிர்கள் வெளியேறியது தான் கொடூரம் . இயற்கையால் பாதி அழிகிறது ,மனிதனால் பாதி அழிகிறது . இயற்கை  அழிவுகளில் நீடித்த பாதிப்புகள் இல்லை . மனிதனால் ஏற்படும் அழிவுகளால் நீடித்த பாதிப்புகள் உருவாகின்றன . மலேசியா வாசுதேவன் மரணமும், ஸ்டீவ் ஜோப்ஸின் மரணமும் இந்த ஆண்டின் மறக்க முடியாத மரணங்கள் . மரணங்கள் எங்கேயும் எப்போதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன .ஆனால் , ஒரு சில மரணங்கள் மட்டுமே கவனிக்கப்படுகின்றன . காரணம் ? 

இவ்வளவுக்கும் மத்தியில் தொடர்ந்து வாழ நமக்கு சக்தி அளிப்பவை , இயற்கை மீதான பிடிப்பும் , நம்பிக்கையும் மற்றும் மற்றவர்கள் நம் மீது காட்டும் அன்பும் , நாம் மற்றவர்கள் மீது காட்டும் அன்பும் தான் .

ஆமாம் .2012 ல உலகம் அழியப் போகுதாமே !
2000 ஆண்டைப் போல 2012 ஆண்டும் சுவாரசியமாகி விட்டது . மனிதன் தொடர்ந்து இயங்க இந்த மாதிரியான சுவாரசியங்கள் அவசியமாகின்றன .

வலுத்தது நிலைக்கும் !

மேலும் படிக்க :

சுற்றுச்சூழல் 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 
..................................................................................................................................................................... 

Monday, December 26, 2011

ஜம்புலிங்கமே ஜடாதரா ...!

முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது .1972 ஆண்டு வெளிவந்த " காசேதான் கடவுளடா ", AVM நிறுவனம் தயாரித்த  ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் . இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஜம்புலிங்கமே ஜடாதரா.." என்ற பாடலைப் எங்கவாது பார்க்க நேரும்போது அடக்க முடியாத சிரிப்பு வந்துவிடும் . வாலியின் கவிவண்ணத்தில் பாடல் அவ்வளவு சிரிப்பு . இந்தப்பாடலை கி .வீரமணி ,கோவை சவுந்தரராஜன் மற்றும் தாராபுரம் சுந்தர் ஆகியோர் பாடியுள்ளனர் .

அந்தப்பாடல் :

             ( இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு பாடல் தொடங்கும் )


முடிந்தால் இந்தத் திரைப்படத்தையே முழுமையாக பாருங்கள் .
அவ்வளவு சிரிப்பு ! காணொளி
மேலும் படிக்க :


நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி ! 


மெதுவான எளிய வாழ்க்கை !  
......................................................................................................................................................................

Saturday, December 24, 2011

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே !

பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம்  , பொதுவுடைமை கருத்துக்களை மையமாக கொண்ட பாடல்களை மட்டும் எழுதவில்லை . கற்பனை வளம் ததும்பக் கூடிய நிறைய பாடல்களை எழுதியுள்ளார் . அவற்றில் ஒரு துளி தான் இந்தப்பாடல் . நிலவை  எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக வர்ணனை செய்துள்ளனர் . இந்தப் பாடலில்  பட்டுக்கோட்டையார் , நிலவை தன் காதலியின் சகோதரியாக கற்பனை செய்து , காதலியை கேலி செய்வதுடன் நிலவையும் கேலி செய்து அற்புதமாக எழுதியுள்ளார் . 1960 ஆம் ஆண்டு வெளிவந்த " எல்லோரும் இந்நாட்டு மன்னர் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . T.M.செளந்தர்ராஜன்  , இந்தப் பாடலை சிறப்பாக பாடியுள்ளார் .

அந்தப்பாடல் :


பாடல் வரிகள் :

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே? (என்…)


கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே _ உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே? (கண்…)

கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே? _ உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்…)

கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே _ ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே _ அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே _ அதை
வாங்கிவந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்…)

கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே…
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே _ நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே _ இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே _ இது (அவள்…)

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே?

நிலவே
இப்போதாவது சொல்
நீ  இளையவளா மூத்தவளா ?!

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ! 

மட்டமான பேச்சு ! 

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு ! 
 ...................................................................................................................................................................  

Thursday, December 22, 2011

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !

" உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல் ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ; ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு . உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் ஓடி மறைந்திடும் மடமை " என்று சொல்கிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .1960 ஆம் ஆண்டு வெளிவந்த "  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . சக மனிதர்களைச் சாராமல் யாராலும் வாழ முடியாது . நாம் சாப்பிடும் ஒரு வேளை உணவில் எத்தனையோ மனிதர்களின் பங்களிப்பு இருக்கிறது . 

 அந்தப் பாடல் :


பாடல் வரிகள் :

பெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஆண் : ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு (ஒன்று…)

இருவர் : உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் (ஒன்று…)

பெண் : ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்
தேதியில் தோன்றும் பெருமை

ஆண் : சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்
தாரணியில் அது புதுமை (ஜாதிகள்…)

இருவர் : உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால்
ஓடி மறைந்திடும் மடமை (ஒன்று…)

பெண் : நேசமும் அன்பும் நிலையாக வேண்டும்
நேர்வழி வேண்டும் உறவில்

ஆண் : பேசிடும் அன்பு செயல் முறையானால்
பேரின்பம் வேறெது உலகில்?

இருவர் : காணா வளமும் மாறா நலமும்
கண்டிடலாம் அன்பு நிலையில் (ஒன்று…)

உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் ஓடி மறைந்திடும் மடமை !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .

மேலும் படிக்க :

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...! 

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு ! 

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 

...................................................................................................................................................................... 

Monday, December 19, 2011

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்விடங்களில்  கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்து கொண்டிருக்கும் குரல் மலேசியா வாசுதேவனுடையது .  தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாசுதேவனின் குரலும் ஜானகியின்  குரலும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன . தமிழிசையோடு கலந்துவிட்ட குரல்கள் அவை . வாசுதேவன் பாடிய உயிரோட்டமான  பாடல்கள் , நமக்கு மகிழ்ச்சியையும் ,சோகத்தையும் , மனதிற்கு இதத்தையும் ,கொண்டாட்டத்தையும் , ஆறுதலையும் ,வாழ்வதற்கான நம்பிக்கையையும் தரக்கூடியவை .

மலேசியாவில் பிறந்து வளர்ந்த ஒருவருக்கு தமிழக கிராமிய பாணியிலான பாடும் முறை எப்படி வாய்த்தது ? இளையராஜா முக்கிய காரணமாக இருக்ககூடும் .வாசுதேவன் , வார்த்தை உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் . எல்லாவிதமான பாடல்களிலும் மிகத் தெளிவான வார்த்தை உச்சரிப்பு . கிராமிய பாடல்களில் கிராமத்தான் போன்ற உச்சரிப்பு அவரது காலத்தில் இவரால் மட்டுமே முடிந்திருக்கிறது . எந்த மாதிரியான படாலாக இருந்தாலும் அதற்கேற்றவாறு தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு அந்தக் குறிப்பிட்ட பாடலுக்கு உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளார் .

அவர் பாடிய எந்தப்பாடலாக இருந்தாலும் முதல் இரண்டு வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள் . முதல் இரண்டு வார்த்தைகளிலேயே  அந்தப்பாடலுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகிறார் .அதன் பிறகு, பாடல் முடியும் வரை நாம் அந்தக்குரலின் கட்டுப்பாட்டில் தான் இருப்போம் . தெரிந்தோ தெரியாமலோ சினிமாவில் பாடுவதில் சமத்துவத்தைக் கொண்டுவந்தவர் , வாசுதேவன் அவர்கள் . ஆம் , அவர் கதாநாயகர்களுக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை , துண்டு துக்கடா வேடங்களில் நடிப்பவர்கள் ,குணச்சித்திர நடிகர்கள் மற்றும்  நகைச்சுவை நடிகர்களின் குரலாகவும் அவரது குரல் ஒலிக்கிறது . அதிகமான திருவிழாப் பாடல்கள் பாடியவர் இவராகத் தான் இருப்பார் . 80 ,90 களில் வெளிவந்த பாடல்களில் கோவில் முன்பு ஒரு குழு ஆடத் தயாரானாலே நாம் முடிவு செய்து விடலாம் அடுத்து ஒலிக்கும் குரல் வாசுதேவன் குரலாகவே இருக்கும் .

நடிகரின் பெயராலோ , இசையமைப்பாளரின் பெயராலோ , படத்தின் பெயராலோ மட்டுமே அவரது அநேக பாடல்கள் கேட்கப்படுகின்றன . மலேசியா வாசுதேவன் பற்றி இசை விமர்சகர் ஷாஜி எழுதிய கட்டுரை அந்தப்போக்கை மாற்றியமைத்தது என்றே சொல்லலாம் . மிகச்சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை அது . அந்த ஒரு கட்டுரைக்காக நிறைய உழைத்திருக்கிறார் . அந்தக்கட்டுரை - மலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன் . எல்லோரும் அவரை மறந்திருந்த வேளையில் வாசுதேவன் பற்றி மிக விரிவாக எழுதப்பட்ட கட்டுரையிது . உயிர்மையில் வெளிவந்த இந்தக்கட்டுரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது . அவரை முற்றிலுமாக மறந்திருந்த திரையுலகமும் சற்றே திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் முகத்தைத் திரும்பிக்கொண்டது .

ஷாஜி ," இசையின் தனிமை " - என்ற தனது புத்தக கலந்துரையாடல் மூலமாக மலேசியா வாசுதேவனைப் பாராட்டி மகிழ்ந்தார் . அரிதாக அந்த நிகழ்வில் பங்குபெறும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது . அந்த நிகழ்வு பற்றி நான் ஷாஜிக்கு  எழுதிய மின்னஞ்சலை அவரது வலைப்பதிவில் பிரசுரித்தார் . அந்தப் பதிவு - வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள்  . அன்று பேசிய மலேசியா வாசுதேவன் " புகழ் நிலையற்றது "  என்று கூறினார் . இதற்கு அவரது வாழ்க்கையே மிகச் சிறந்த உதாரணம் .

 2010 டிசம்பர் மாதம் பொதிகை தொலைக்காட்சியில் அவரது பேட்டி ஒளிபரப்பானது . அந்தப் பேட்டியில் பாதியை மட்டுமே பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது .அந்தப் பேட்டியில் அவர்,
" நாம் கலைஞர்களை உருவாக்க வேண்டும் , இளையராஜா என்னை உருவாக்கியதைப்போல, இன்று புதுப் பாடகர்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை , இரண்டு மூன்று பாடல்கள் மட்டுமே பாட வாய்ப்புக் கிடைக்கின்றன. எல்லா வகையான (சோகம் ,தத்துவம் )  பாடல்களைப்  பாட வாய்ப்பு கிடைப்பதில்லை . சோகம் ,தத்துவம் நிறைந்த பாடல்கள் இன்றைய படங்களில் இல்லை . சோகப்பாடல்கள் மட்டுமே மனிதனின் உணர்வுகளை ஊடுருவும் . புதுப் பாடகர்கள் எந்த மொழியில்  பாடினாலும்  வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க வேண்டும். இந்த  மாதிரியான  தொலைக்காட்சியில் பேசக் கிடைக்கும் வாய்ப்புகள் எனது ஆதங்கத்தை
வெளிப்படுத்தஉதவுகின்றன. ஒரு பாடல் மட்டும் பாடினால் போதும் என்று
தான் சென்னை வந்தேன் . 5000 பாடல்கள் பாடிவிட்டேன்  இதற்குமேல்  என்ன வேண்டும் " என்று கூறினார் .

20-02-2011 அன்று  மலேசியா வாசுதேவன் மரணமடைந்தபோது கூட பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை . அவரது மரணம் ரசிகன் என்ற முறையில் என்னை மிகவும் பாதித்தது . இவ்வளவு சீக்கிரத்தில் அவருக்கு மரணம் வரும் என்று நான் எதிர்பார்க்க வில்லை. திரையுலகின் அன்பும் , ஆதரவும் அவருக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருப்பார் . திரையுலகம் செய்யாததை ஷாஜி செய்தார் .ஷாஜியின் அன்பு அவருக்கு நிச்சயம் ஆறுதலாய் இருந்து இருக்கும் . மலேசியா வாசுதேவன் 
பற்றிய  ஷாஜியின் கட்டுரையின் அதிர்வுகள் இன்னும் என்னுள்  ஒலித்துக்கொண்டே இருக்கின்றன .

ஆனந்த விகடன் இதழில் ஒரு ஓரத்தில் வெறும் ஒரு பக்கத்தில் மட்டுமே மலேசியா வாசுதேவன் மரணம் பற்றிய குறிப்பு இருந்தது . உண்மையில் அவரது மரணத்தை விட அதிகமாக வலித்தது . ஒரு உன்னதமான இசைக்கலைஞனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை  இவ்வளவுதானா ?. இதே ஆனந்த விகடனில் ஒன்னுக்கும் உருப்படாத விசயங்கள்  எல்லாம்  பக்கத்தை நிரப்பும் போது வாசுதேவன் அவர்களுக்காக ஒரு மூனு பக்கம் கூட ஒதுக்க முடியவில்லை .எந்த மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம் ? வெறும் வணிகம் மட்டும் தான் வாழ்க்கையா ? மற்ற இதழ்களில் அந்த ஒரு பக்கமும் இடம் பெறவில்லை என்றே நினைக்கிறேன் .

நான் பார்த்த வரையில்  பொதிகை தொலைக்காட்சி மட்டுமே வாசுதேவன் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை இரவு 10 . 15 க்கு என்றும் இனிமை பகுதியில் ஒளிபரப்பியது . ஆனால் , அவரது பாடல்களால் பயன் பெரும் அனைவரும் அவரை மறந்து விட்டனர் . அவரது இறப்பை விட வருத்தமான விசயம் ,
 இறந்த பின்பும் அவரை  புறக்கணிக்கும் இந்த உலகம் தான் .

வரலாற்றில் , தனித்துவம் மிக்கவர்களுக்கு எப்போது  முக்கியத்துவம் 
கொடுத்துள்ளோம் ? அவர்கள் வாழ்ந்த  காலத்திற்கு பிறகு தான் அவர்களைக்  கொண்டாடி வந்துள்ளோம்  . வாசுதேவன் அவர்களின் மரணச் செய்தியைக் கேட்ட போது எனக்கு மகாகவி பாரதி தான் நினைவுக்கு வந்தார் . அவரை எப்படிப்  புறக்கணித்தார்களோ , அது போலவே வாசுதேவன் அவர்களையும் புறக்கணித்து உள்ளோம் . இன்று எப்படிப்  பாரதியை இந்த உலகம் கொண்டடுதோ , அதுபோலவே  நாளை வாசுதேவன் அவர்களையும் இந்த உலகம் கொண்டாடத்தான் போகிறது .

பூங்காற்று திரும்பத் தான் போகிறது . அதை நாம் பார்க்கத்தான் போகிறோம் . எனக்கு தெரிந்த வரையில் தமிழ் மண்ணோடு கலந்துவிட்ட  இரண்டு  ஆண்  குரல்கள் ஒன்று T.M.சவுந்தர்ராஜன்,  இன்னொன்று மலேசியா வாசுதேவன் .தமிழ், இயல் , இசை , நாடகம்  என்னும்  மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது . 
இசைத்தமிழில் இவர்கள் இருவருக்கும் நிச்சயம் இடம் இருக்கும் . காலத்தால் அழிக்க முடியாத குரல்கள் . இவர்களுக்கு யாருமே மாற்று இல்லை .  மரணம், வாசுதேவன் அவர்களின் உடலுக்குத்தான் .   
அவரது பாடல்களுக்கு இல்லை .

கலைஞனுக்கு என்றுமே அழிவில்லை !

அவர்கள் ஏதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் ! 

மேலும் படிக்க :

முகப்பு பக்கம் 
..................................................................................................................................................................... 

Friday, December 16, 2011

பொறக்கும் போது பொறந்த குணம் !

மனிதன் பிறக்கும்போது பிறந்த குணங்கள் காலப்போக்கில் எப்படி மாறிவிடுகின்றன என்பதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்தப்பாடல் மூலம் உணர்த்துகிறார் . "சக்கரவர்த்தி திருமகள் " என்ற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடி ,MGR வாயசைப்பது போல அமைந்த பாடலிது . மக்களின் அறியாமை  இருளை நீக்குவதற்காகவே நிறையப்  பாடல்களை  எழுதியுள்ளார் , பட்டுக்கோட்டையார் . அதில் இந்தப்பாடலும் ஒன்று .

 அந்தப்பாடல் :
                                        
திரைப்படத்தில் -  http://www.pattukkottaiyar.com/site/?p=477

 
 பாடல் வரிகள் :
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் _ காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம் _ ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் _ ஆனால்
இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா
பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போக மாறுது _ எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது  - மனிதன் (பொறக்…)


பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது _ ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ்சேர்ந்து
திருடனென்றே உதைக்குது -மனிதன் (பொறக்…)

காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது _ புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்புடிச்சி ஆட்டுது _ வாழ்வின்
கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது _ ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது -மனிதன் (பொறக்…)

புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை _ பச்சைப்
புளுகை விற்றுச் சலுகை பெற்ற மந்தை _ இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை    -இதில்
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் _ நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் _ நாம்
உளறி என்ன? கதறி என்ன? ஒன்றுமே நடக்கவில்லை
தோழா _ ரொம்ப நாளா!1 (பொறக்…)

"எல்லாம் இருக்கும்போது பிரிந்த குணம் இறக்கும்போது சேருது", "பட்டப்பகல் திருடர்களைப் பட்டாடைகள் மறைக்குது ", "காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது ", "வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது" , "இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை " -அருமையான வரிகள் .

நமது குணங்கள் பற்றி சிந்திப்போமாக !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .

மேலும் படிக்க :

மெதுவான எளிய வாழ்க்கை ! 

பட்டுக்கோட்டையார் பாடல்கள் !

....................................................................................................................................................................

Wednesday, December 14, 2011

மெதுவான எளிய வாழ்க்கை !

வாழ்க்கை எளிதானது அல்ல . ஆனால் ,எளிய வாழ்க்கை என்பது அழகானது ,ஆனந்தமானது ,அன்பானது ,நிறைவானது . ஆடம்பரமிக்க ,பரப்பான ,வேகமான வாழ்கையை நோக்கியே நாம் தள்ளப்படுகிறோம் . எலிக்கதை ஒன்று சொல்வார்கள் " ஒரு ஊருல ஆயிரக்கணக்கான எலிகள் ஒரு தெருவில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன .அந்தத் தெருவுல இருந்த வீட்டிலிருந்து ஒரு எலி எட்டிப்பார்த்து "எல்லோரும் எங்க போறீங்க " என்று கேட்டது .அதுக்கு தெருவுல போன ஒரு எலி, " எனக்குத் தெரியாது .எல்லோரும் போறாங்க நானும் போறேன் " என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஓடியது . அந்தக்கூட்டத்தில் அந்த வீட்டு எலியும் சேர்ந்து கொண்டது " . அந்த வீட்டு எலியின் மனநிலையில் தான் நாம் இருக்கிறோம் .

பெரும்பாலான நேரங்களில் நம்முடைய வாழ்க்கை நம் கைகளில் இல்லை . சமூக அங்கீகாரம் தான் பெரிதாக பார்க்கப்படுகிறது .புகழ் மிக்க வாழ்க்கை எல்லோருக்கும் சாத்தியமில்லை . புரிந்துகொள்ளும் மனநிலை நமக்கில்லை . எந்நேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் பவனி வரும் புகழ் மிக்க மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் இழப்பவை  ஏராளம் . சாதாரண மனிதர்களைப் போல அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியாது . புகழின் அளவைப் பொருத்து அவர்களுக்கு மனநெருக்கடி இருக்கும் .இந்த மனநெருக்கடியை சமாளிப்பவர்கள் புத்திசாலிகள் .எந்தத் தனி மனிதனையும் கடவுளாகவோ ,தலைவனாகவோ கொண்டாடக்கூடாது . நம் வாழ்க்கைக்கு நாம் மட்டுமே தலைவர்கள் ,கடவுள்கள் .

எல்லோருக்கும் ஒரே ஒரு வாழ்க்கை தான் . பணக்காரர்களுக்கும் ஒரு வாழ்க்கை தான் .புகழ் மிக்கவர்களுக்கும் ஒரு வாழக்கை தான் . ஏழைகளுக்கும் ஒரு வாழ்க்கை தான் . எல்லோருடைய வாழ்க்கையும் மரணத்தின் முன் சமம் . பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கை தான் எல்லோருக்கும் . உயிரினங்களின் பிறப்பு என்பது ஒரு மலர் மலர்வது போல எங்கும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது . கிராமத்தில் வசிப்பவர்கள் , விதவிதமாக நிகழும் மரணங்களை  மிக நெருக்கமாக நேரடியாக உணருகிறார்கள் கூடவே வாழ்வின் நிலையாமையையும் . மரணம் காற்றைப்போல எங்கும் நிறைந்திருக்கிறது .

எளிய மனிதர்களையும் ,எளிய வாழ்க்கையையும் கவனத்தில் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம் . சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை அவ்வளவு அழகானது , மகிழ்ச்சியானது . சரி ,சுற்றுப்புறத்தை மறந்து நீங்கள் கடைசியாக எப்போது வாய்விட்டு சத்தம் போட்டு சிரித்தீர்கள் ? யோசிக்கிறோம் . ஆனால் , அவர்களுக்கு இது தினமும் சாத்தியம் . சிரிக்க மறந்து இயந்திரம் போலவே வாழ்கிறோம் . நாலு பேர் ,நாலு பேர் என்று சதா புலம்பிக்கொண்டு நமக்காக வாழாமல் நாலு பேர் முன்னாடி பேர் வாங்கவே வாழ்கிறோம் .

எளிய மனிதர்கள் ,எளிய மனிதர்களோடு வெகு எளிதில் நெருக்கமாகி விடுகிறார்கள் .பிச்சைக்காரர்கள் ,பிளாட்பாரவாசிகள் ,குப்பை பொருக்குபவர்கள் ,வீட்டுவேலை செய்பவர்கள் ,கூலித் தொழிலாளிகள்  இவர்களின் வாழ்க்கையை கவனித்துப் பாருங்கள் உண்மை புரியும் .நாம் ,சக மனிதர்களிடம் நாலு வார்த்தைகள் பேசுவதற்குக் கூட  எப்போதும் தயங்கிக் கொண்டே இருக்கிறோம் . இன்றைய நிலையில்  தினமும் சந்திக்கும் மனிதர்களிடம் நாலு வார்த்தைகள் பேசுவது தான் நாம் செய்யும் பெரிய  சேவை .இயல்பாக பேசுவதற்கும் ,சிரிப்பதற்கும் கூட யோசிப்பது கொண்டே இருப்பது என்ன மாதிரியான வாழ்க்கை ?

மூன்று தலைமுறைகளுக்கு மேல் யாரும் தொடர்ந்து பணக்காரனாகவோ  ஏழையாகவோ  இருந்ததில்லை . ஒரு சிலரைத் தவிர இது எல்லோருக்கும் பொருந்தும் .வாழ்வின் நிலையாமையை உணராமல்  சமூக அங்கீகாரம் ,சமூக அங்கீகாரம் என்று சொல்லிக்கொண்டு தெரிந்தோ தெரியாமலோ நிறைய பணம் ,சொந்த வாகனம் ,சொந்த வீடு என்று சேர்க்கவே விரும்புகிறோம் . சமூகத்தின் எந்த மட்டத்தில் வாழ்ந்தாலும் நமக்கான நிம்மதிக்கும்  ,மகிழ்ச்சிக்கும் நாம் மட்டுமே காரணம் .

எளிய வாழ்க்கை பற்றிச் சிந்திப்பவர்களுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம் ,தோல்வி அடைந்தவன் ,பணம் சேர்க்க வக்கில்லாதவன் , ஆடத் தெரியாதவன் (ஆடத் தெரியாதவனுக்குத் தான் தெரு கோணல் !) .தனது உழைப்பின் மூலம் தனக்குத் தேவையான உணவைத் தானே தேடி உண்ணும் எல்லா உயிரினங்களும் ( மனிதர்களும் )  வெற்றியாளர்கள் தான் . பணத்தை வைத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டாம் .

சுய புலம்பல் :
மெதுவான வாழ்க்கை வாழவே விரும்புகிறேன் . எந்நேரமும் வேகமாகவும் பரபரப்பாகவும் இருப்பது பிடிக்கவில்லை .பெரும்பாலும்  நடந்து செல்லவே விரும்புகிறேன் ,தேவைபட்டால் மட்டும் வாகனத்தின் உதவியை நாடுகிறேன் . டவுன் பஸில் போகவே பிடிக்கிறது . ஒரு குறிப்பிட்ட சாதனைக்காக ,வெற்றிக்காக வாழ்க்கையை இழக்காமல் ஒவ்வொரு நாளாக வாழ விரும்புகிறேன் .

இந்த சிந்தனை இப்படியே தொடருமா ? அல்லது காலம் எனது சிந்தனையை மாற்றியமைக்குமா ? தெரியாது . எப்படி இருந்தாலும் காலத்தின் விளையாட்டை விடாமல் ரசிக்கிறேன் .யாராலும் ஆற்றமுடியாத அத்தனை துயரங்களையும் ஆற்றும் வல்லமை காலத்திற்கு மட்டுமே உண்டு . வருடங்கள் ஓடுகின்றன . ஆனால் ,காலம் மாறவில்லை . பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும்  ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடிகள் தான் இன்றும் ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடிகள் தான் . மின்சாரமோ ,கான்கிரிட் வீடோ , நல்ல சாலையோ ,வாகனமோ,துரித உணவோ , சோப்போ ,பற்பசையோ ,அரிசி உணவோ  இல்லாமல் இயற்கையையும் தனது உழைப்பையும் மட்டுமே நம்பி வாழ்ந்த நம் முன்னோர்களின் ஒவ்வொரு நாளும் இருபத்து நான்கு மணி நேரங்களிலானது . இன்றைய நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அதே இருபத்து நான்கு மணி நேரங்களிலானது தானே . 

அடுத்த நொடி இந்த உலகம் தரப்போகின்ற அற்புதங்களும் ஆச்சரியங்களும் ஏராளம் !

மேலும் படிக்க :

உண்மையான கொண்டாட்டம் ! 

கண்ணீர் துளி - மனிதத்தின் சுவாசம் 

எது நிரந்தரம் ? 

வாழ்க்கை ஒரு போராட்டம் ! 
......................................................................................................................................................................   

Wednesday, December 7, 2011

மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !

பூமியை அழிக்க யாராவது வேறு கிரகத்தில் இருந்து வந்தால் மட்டும் தான் பூமியர்கள் ( மனிதர்கள் ) அனைவரும் ஒன்றுபடுவார்கள் போல . அதுவரை எங்கேயும் எப்போதும் அடிதடி தான் . நாடு ,மாநிலம் ,மாவட்டம் ,ஊர்,கிராமம் ,தெரு ,சந்து ,பக்கத்து வீடு , குடும்பம் என்று பிரிவினைகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது தான் ஒரு நாகரிக சமூகத்தின் வளர்ச்சியா ?

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எதிரி நாடு உள்ளது . நான் இந்த நாட்டுக்காரன் ,நான் அந்த நாட்டுக்காரன் என்று ஓயாத பெருமை வேறு . நாட்டுக்காரன் பெருமையெல்லாம் மாநிலம் என்று வரும்போது உடைந்து விடுகிறது . நான் இந்த மாநிலத்துக்காரன் , நான் இந்த மாவட்டத்துக்காரன் ,நான் இந்த ஊர்க்காரன் , நான் இந்த தெருக்காரன் ,நான் இந்த குடும்பத்துக்காரன் என்று பெருமை பேசி சதா சண்டைக்கு போவது தான் நம் வேலையா ?

இவற்றையெல்லாம் விட பெரிய பிரிவினைகள் இனம் ,மதம் ,மொழி ,ஜாதி ,கட்சி சார்ந்த பிரிவினைகள் தான் . இனம் இனம் என்று மேடையில் பேசுவார்கள் ,இறங்கி வந்ததும் ஜாதி பற்றியும் , கட்சி பற்றியும் மட்டுமே சிந்தனை செய்வார்கள் . மனிதர்களை ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டி சிந்திக்கவிடாமல் செய்வதே இந்த பிரிவினைகளின் நோக்கம் . உரக்க உரக்க பேசியே நம்மை  இந்தப் பிரிவினைகளின் ( நம் இனம் ,நம் மொழி ,நம் ஜாதி ,நம் கட்சி )கூண்டுக்குள் அடைத்துவிடுவார்கள் .

நம்மைச் சுயநலவாதிகளாக மாற்றுவது தான் இந்த பிரிவினைவாதிகளின் நோக்கம் . அப்போதுதான் நம்மை வைத்து அவர்கள் குளிர்காய முடியும் . இவை எல்லாவற்றுக்கும் பின்னால் அரசியல் மட்டுமே இருக்கிறது . எல்லாப் பிரிவினைகளிலும் அரசியல் கலப்பதால் தான் மற்றவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது . அரசியல் கலக்காதவரை பிரிவினைகளால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை .

ஒரு சில வளர்ந்த நாடுகள் ,வளராத நாடுகளுக்கிடையே பிரிவினைகளை உருவாக்கி ஆயுதங்களை விற்கின்றன . ஆயுதங்கள் விற்பனையை மட்டும் தடை செய்துவிட்டால் ஒரு சில வளர்ந்த நாடுகள் ஒரே நாளில் வளரும் நாடுகளின் பட்டியலில் இணைந்துவிடும் .

மாநிலங்களைப் பொருத்தவரை  எல்லா மாநிலங்களும் கண்டிப்பாக ஒற்றுமையுடன் இருக்கக் கூடாது என்பதுதான் நாட்டை ஆட்சி செய்பவர்களின் நோக்கம் . ஒரு வேளை எல்லா மாநிலங்களிலும் ஒற்றுமையாக செயல்பட்டால் , நாட்டை ஆளும் அரசு மற்றவர்கள் மீது அதிகாரம் பண்ண முடியாது ,ஊழல் பண்ண முடியாது ,மாநில ஆட்சியைக் கைப்பற்ற முடியாது ,நம்மை வெளிநாடுகளுக்கு விலை பேசி விற்கமுடியாது . அதனால் மாநிலங்களுக்கிடையே  பிரிவினைகள் அவசியம் என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது .ஏமாளிகள் நாம் மட்டுமே .

மற்ற பிரிவினைகளை விட கட்சி சார்ந்த பிரிவினைகள் தான் நாளுக்குநாள் அதிகமாகிறது . தான் பின்பற்றும் அரசியல் கட்சி எவ்வளவு அட்டூழியங்கள் செய்தாலும் வீம்புக்கென்று அந்த அரசியல் கட்சியை தொடர்ந்து ஆதரிப்பது முட்டாள்தனமல்லவா . இந்த முட்டாள்தனத்தை மூலதனமாக வைத்துதான் யார் ஆட்சிக்கு வந்தாலும் கூச்சமே இல்லாமல் தொடர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள்  . கட்சியையும் ,கட்சித் தலைவரையும் தொடர்ந்து கொண்டாடும் வரை நமக்கு எந்த நல்லதும் நடக்காது .

இனம் , மொழி, மதம், ஜாதி சார்ந்த பிரிவினைகளை வளரவிடக்கூடாது . இவற்றை வைத்துதான் அரசியலே நடக்கிறது .நாம் , பிரிவினைவாதக் கூண்டுக்குள் இருந்து வெளியே வராதவாறு கவனமாக பார்த்துக் கொள்வதுதான் அரசியல்வாதிகளின் வேலை . எல்லோரும் மனிதர்கள் தான் , இன்னும் சொல்லப்போனால் எல்லோரும் தாவர ,விலங்குகளைப் போல   சாதாரண உயிரினங்கள் தான் என்ற எண்ணம் வளராதவரை நமக்கு வளர்ச்சி என்பதே கிடையாது .

நாமெல்லாம் இயற்கையின் குழந்தைகள் !

மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் ! 
 .................................................................................................................................

Thursday, December 1, 2011

உண்மையான கொண்டாட்டம் !

குழந்தைகளின் உலகம் மிகவும் அழகானது ,மிகவும் அற்புதமானது ,மிகவும் ஆனந்தமானது ,மிகவும் கொண்டாட்டமானது . இதை உணராத மனநிலையில் நாம் இருக்கிறோம் . குழந்தைகளின் தினசரி வாழ்வில் நிறைய அன்பும் ,நிறைய பிணைப்பும் , கொஞ்சம் சண்டையும் கலந்திருக்கின்றன . குழந்தைகளை குழந்தைகளாக வளர நாம் அனுமதிப்பதே இல்லை . நான்கு வயதிற்குள் , தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் .

அறிவியல் என்ன சொல்கிறது என்றால் , குழந்தையின் 14 வயது வரை நம் கைகள் அவர்களைத் தொட்டுக்கொண்டே இருக்க வேண்டும் . அப்போது தான் அந்தக் குழந்தை தனக்காக இவர் இருக்கிறார் என்று உணரும் .இல்லாவிட்டால்  தனக்காக யாரும் இல்லை என்று உணர்த்து அதற்கேற்றவாறு  நடந்து கொள்ளும் . அப்புறம் " எம்புள்ளை என் மேல பாசமாவே இல்லை " னு புலம்புவதால் ஒன்றும் நடக்காது .

" தொடுதல் " - ஒரு அற்புதமான நிகழ்வு . நெருக்கமானவர்கள் சந்திக்கும் போது தொட்டுக்கொண்டே பேசுங்கள் . தொடுதல் ,உங்களில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தும் . குழந்தைகள் நம்மிடமிருந்து அதிக தொடுதலையும் ,அதிக நெருக்கத்தையும் எதிர்பார்க்கிறார்கள் . இதை செய்யாதே ,அதை செய்யாதே என்று நாளும் நம்மிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள் ."பேசாமல் உட்கார்ந்து டிவி பார் " - என்று பணிக்கப்படுகிறார்கள் . அப்படி டிவி பார்க்கும் குழந்தை , ' நல்லபிள்ளை ' என்று பெயர் வாங்குகிறது .என்ன கொடுமை இது ? " எண்ணிலடங்காத விளையாட்டுகளால் நிரம்பியது தான் அவர்களின் உலகம் "  என்று எப்போது உணரப்போகிறோம் . 

"மண்ணுல விளையாடாதே! " என்று தடுத்து மண்ணோடு உருவாகும்  நெருக்கத்தைப்  பறிக்கிறோம் . இன்று , நகரங்களில் மண்ணைப் பார்ப்பதே அரிதிலும் அரிதாகிவிட்டது .எங்கெங்கு காணினும் கான்கிரிட் .வண்ணதாசன் சொன்னது போல " கையிலும் ,காலிலும் மண் படாத வாழ்க்கை ,ஒரு வாழ்க்கையா ? ".  செருப்பைத்  துறந்து ஒரு முறை மண்ணில் நடந்து பாருங்கள் ,ஒரு முறை மண்ணை கைகளால் அள்ளுங்கள் ,ஒரு முறை மண்ணில் உங்கள் கால்களைப் புதைத்து அமருங்கள் .மண் உங்களோடு பேசுவதை உணர முடியும் . நான் குறிப்பிட்டது ,கடல் மணலையோ அல்லது நம் புண்ணியவான்கள் எச்சி துப்பி வைத்திருக்கும் மண்ணையோ அல்ல .

" குழந்தைகள் மண்ணோடு விளையாடும் போது அவர்களின்  நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கிறது "- என்று புதிய ஆய்வு ஒன்று அறிவிக்கிறது . இனி மேலாவது குழந்தைகளை மண்ணோடு விளையாட அனுமதிப்பார்களா ? மண்ணில் விளையாட சொல்வதற்குக்கூட யாரோ ஒருவர் ஆய்வு நடத்த வேண்டியுள்ளது .எனது குழந்தைப் பருவத்தில் மழை பெய்து முடிந்த ஒவ்வொரு அடுத்தநாளும் அவ்வளவு அற்புதமானது . மழைநீர் ஓடிய தடம் அவ்வளவு அழகாக இருக்கும் .விதவிதமான நிறங்களாலான மண் துகள்கள் கலந்த ஈரமண்ணிலேயே கழியும் எங்களது காலையும் ,மாலையும் .  கொட்டாங்குச்சியில் ஈரமண்ணை நிரப்பி இட்லி சுட்டு விளையாடிய நாட்கள் இன்றும் பசுமையாக இருக்கின்றன . இன்றும் மழை பெய்கிறது , மழை நீர் ஓடுகிறது ,கொட்டாங்குச்சியும் இருக்கிறது .ஆனால் , நிறங்களாலான மண் துகள்களையும் ,இட்லி சுடும் குழந்தைகளையும் காணவில்லை .காரணம் , சிமென்ட் சாலை .

" கேள்வி கேட்பது " - மிகவும் அவசியாமான செயல் . குழந்தைகள் மட்டும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுவதில்லை . குழந்தைகள் ,அபத்தமான , வேடிக்கையான , கற்பனையான ,எதார்த்தமான மற்றும் அறிவான கேள்விகளுக்குச்  சொந்தக்காரர்கள் .அவர்களின் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில்கள் கிடைக்கின்றன , பல கேள்விகளுக்கான பதில்கள் , அதன் எளிமையாலும் ,கடினத்தாலும் , நேரமின்மை என்று காட்டிக்கொள்வதாலும்  வீட்டிலும் ,பள்ளியிலும் மறுக்கப்படுகின்றன . தொடர்ந்து கேள்விகள் கேட்கும் குழந்தையே ஆரோக்கியமானது , உலகைப்  புரிந்து கொள்வதின் ஆரம்பமே கேள்விகள் என்று நாம் உணர வேண்டும் .      

பழைய கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் குழந்தைகள் குழந்தைகளாக காட்டப்பட்டார்கள் .அவர்களுக்கென்று அவர்களுடைய பாணியில் தனிப்பாடல்கள் இருந்தன . நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களாக குழந்தைகள் இருந்தனர் . அவர்களைச் சுற்றியே கதை நகர்ந்தது .இன்றைய திரைப்படங்கள் , குழந்தைகளைக் குழந்தைகளாக காட்டுவதில்லை , குழந்தைகளுக்கென்று தனிப்பாடல்கள் இல்லை,
குழந்தைகளை அபத்தமான நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்துகின்றன .

டிவி பார்க்கவும் , கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கேம்ஸ் விளையாடவும் மட்டுமே அனுமதிக்காமல் மண்ணிலும் மற்ற குழந்தைகளுடனும் விளையாட அனுமதிக்க வேண்டும் . இயற்கையை ரசிக்கவும் , இயற்கையின் மாறுதல்களைப்  புரிந்து கொள்ளவும் கற்றுத்தர வேண்டும் . மூன்று வயதிலேயே  படி! படி! என்று அதட்டாமல் வேண்டிய மட்டும் விளையாட அனுமதிக்க வேண்டும் . விளையாட துணை கிடைக்காத போது நாமே துணையாக மாறி அவர்களுடன் விளையாட வேண்டும் .

சமீபத்தில் ஒரு 5 வயது குழந்தை பாடிய பாடல் :

தக்காளி தக்காளி
எப்ப கல்யாணம்
நேத்து மத்தியானம்
யாரு வந்தாரு
ஐயர் வந்தாரு
என்னா கேட்டாரு
மோர் கேட்டாரு
என்னா மோர்
விச மோர்
என்னா விசம்
பாம்பு விசம்
என்னா பாம்பு
மலைப்பாம்பு
என்னா மலை
அண்ணாமலை !

14 வயது வரை அவர்கள் குழந்தைகள் தான் என்பதை நாம் உணர வேண்டும் . குழந்தைகளைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருங்கள் ,நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய விசயங்கள் கிடைக்கும் .நமது கொண்டாட்டமெல்லாம் கொண்டாட்டமே இல்லை .

ரரின்றா பிரகர்சா ( Rarindra Prakarsa ) , இயற்கையான சூழ்நிலையில் எடுத்த குழந்தைகளின் அற்புதமான படங்களைப் பார்க்க - http://photo.net/photodb/member-photos?user_id=2231437

குழந்தைகளின் கொண்டாட்டமே  உண்மையான கொண்டாட்டம் !

நன்றி - http://photo.net/
  
மேலும் படிக்க :

காங்கிரஸை அழிப்போம் ! 

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 
................................................................................................................................................................

மட்டமான பேச்சு !

மட்டமான பேச்சைப் பேசுவதில் என்றும் முதலிடம் வகிப்பது நம் அரசியல்வாதிகள் தான் .எந்த மாதிரியான பிரச்சனையாக இருந்தாலும் அவர்களின் பேச்சு மட்டமானதாகவே உள்ளது . சில விதிவிலக்குகள் இருக்கலாம் .ஏதாவது ஒரு அரசியல்வாதியை எடுத்துக்கொள்ளுங்கள் , அவர் அரசியலுக்கு வந்தது முதல் இன்று வரை பேசிய பேச்சைக் கேட்டுப் பாருங்கள் . அவரது  பேச்சு எதற்கும் பயன்படாது போனது புரியும் .

அரசியல்வாதிகள் தவிர்த்து , நம்மைச் சுற்றி எப்போதும் வெட்டிப்பேச்சு பேச ஆட்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள் . அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . இல்லாவிட்டால்  " மட்டமான பேச்சு அவர்கள் வாயைக் கெடுப்பதுடன் ,நம் காதையும் கெடுக்கும் " என்று சொல்கிறார் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . 1965 ஆம் ஆண்டு வெளிவந்த " மகனே கேள் " என்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடலை எழுதியுள்ளார் . A .L . ராகவனும் , ஜிக்கியும் இந்தப்பாடலைப் பாடியுள்ளனர் .

அந்தப் பாடல் :




பாடல் வரிகள் :

மட்டமான பேச்சு _ தன்
வாயைக் கெடுக்குதுங்க _ அது
வெட்டித்தனமாக் கேக்கிறவங்க
காதையும் கெடுக்குதுங்க (மட்ட… )

சந்திலும் பொந்திலும் வாதம் _ அதால்
தலைவலி மருந்துக்கு லாபம் _ அந்த
ஜாடையிலே சில கேடிகள் செய்வது
சட்டையின் பைகளைக் கெடுக்குதுங்க (மட்ட…)

கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து
குடும்பத்தைக் கலைக்குதுங்க _ பெருங்
குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி
பொழப்பையும் கெடுக்குதுங்க

புரளியும் வதந்தியும் மூட்டி _ ஒரு
பொய்யை நூறாகக் கூட்டி _ கரும்
பூதமென்றும் சிறு பேய்களென்றும் _ பல
பாதையில் மூளையைக் கெடுக்குதுங்க (மட்ட…)

அறையில் வளர்ந்து வெளியில் பறந்து
அவதிப் படுத்துதுங்க _ ஊரை
அவதிப் படுத்துதுங்க _ அது
அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே
அமைதியைக் கெடுக்குதுங்க

பாழும் பொய்யென்று காட்டி _ உடல்
மாயக் கூடென்று கூட்டி _ உயர்
வானத்திலே பரலோகத்தைப் பாரென
மனதையும் அறிவையும் கெடுக்குதுங்க (மட்ட…)

 "சந்திலும் பொந்திலும் வாதம் _ அதால் தலைவலி மருந்துக்கு லாபம் ", "கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து குடும்பத்தைக் கலைக்குதுங்க","அறையில் வளர்ந்து வெளியில் பறந்து அவதிப் படுத்துதுங்க","வானத்திலே பரலோகத்தைப் பாரென
மனதையும் அறிவையும் கெடுக்குதுங்க" - எவ்வளவு அழுத்தமான வரிகள் .

குடும்பத்தைக் கெடுக்கவும் ,ஊரைக் கெடுக்கவும் ,நாட்டைக் கெடுக்கவும் ,உங்களின் நேரத்தை விழுங்கவும்  நிறையபேர் அலைகிறார்கள் . உசாராக இருங்கள் !

காதப் பொத்திக்கிங்க !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ மற்றும்  கிருபாகரன் .

மேலும் படிக்க :

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...! 
 ................................................................................................................................................................
 

Monday, November 28, 2011

ஆய கலைகள் 64 !

ஆய கலைகள் 64 பற்றி நமது ராஜாக்கள் கதைகளிலும் ,பள்ளிப்பாடத்திலும் கேள்விப்பட்டு இருக்கிறோம் . இதுவரை ஏனோ அந்த 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரவில்லை . தற்செயலாக  இணையத்தில் கிடைத்தது . அவை ,
 
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)


நன்றி : Tamil .

மேலும் படிக்க : 
 
நாமெல்லாம் யார் ?  


சிவில் சர்வீசஸ் தேர்வில் கேள்விகள் தமிழிலும் இருக்க வேண்டும் ! 
 .............................................................................................................................
 

Sunday, November 27, 2011

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு !

சுய சிந்தனையே இல்லாமல் மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்புபவர்களுக்கும் , மூட நம்பிக்கைகளை நம்புபவர்களுக்கும், " ஆறறிவில் ஓரறிவு அவுட்டு ! " என்று சொல்கிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . 1965 ஆம் ஆண்டு வெளிவந்த " மகனே கேள் " என்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடலை எழுதினார் .

அந்தப் பாடல் :    



பாடல் வரிகள் :

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு  (ஆறறி…)


அடக்கமில்லாப் பெண்கள் சிலர்
நடக்கும் எடக்கு நடையிலும்
ஆதிகாலப் பண்பைக் காறறல
பறக்க விடும் உடையிலும் (ஆறறி…)

தன்ரேகை தெரியாத
பொய்ரேகைக் காரரிடம்
கைரேகை பார்க்கவரும் முறையிலும் _ அவன்
கண்டதுபோல் சொல்லுவதை
நம்பிவிடும் வகையிலும் (ஆறறி…)

ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமிக் கருத்திலும்
எந்த நாளும் திருந்தாத மூடத்தனத்திலும்
சோம்பேறி சுகத்திலும் துடைநடுங்கும் குணத்திலும்
சொந்த நிலையை மறந்துதிரியும் ஈனப் பேச்சிலும்
சிந்திக்காத இடங்களிலும்
தெண்டச்சோத்து மடங்களிலும் (ஆறறி…)


 " தன்ரேகை தெரியாத பொய்ரேகைக் காரரிடம் " ," ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமிக் கருத்திலும் எந்த நாளும் திருந்தாத மூடத்தனத்திலும் "," சோம்பேறி சுகத்திலும் துடைநடுங்கும் குணத்திலும் " , எவ்வளவு வலிமையான வரிகள் .

நமக்கு ஆறு அறிவா ? ஐந்து அறிவா ?

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 

......................................................................................................................

Friday, November 25, 2011

நாமெல்லாம் குற்றவாளிகளே !

நாம் வாழும் இந்தப்  பூமி, கோடிக்கணக்கான உயிரினங்களுக்குச் சொந்தமானது . ஆனால் , விலங்கினங்களில் ஒன்றான மனிதன் ,தனக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதுகிறான் . இந்த ஒரு விலங்குக்கூட்டம்
( மனிதர்கள் ) வாழ்வதற்கு மற்ற அனைத்து  உயிரினங்களையும்  பாதிக்கிறது .பாதிப்பு எதுவும் வந்தாலும் ,தான் மட்டுமே பாதிக்கப்படுவதாக கருதுகிறான் ,மற்ற உயிரினங்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை .பூமியில்  வாழும் சகமனிதர்கள் பற்றியும் கவலையில்லை .இதுல , தான் மட்டுமே ஆறறிவு உள்ள மிருகம் என்ற பெருமை வேறு .

 மற்ற உயிரினங்களைச் சாராமல் எந்த உயிராலும் பூமியில் வாழ முடியாது .மனிதன் ,மற்ற உயிரினங்களை விட உயர்ந்தவன் அல்ல .அவன் இயற்கையின் ஒரு பகுதி மட்டுமே .மற்ற உயிரினங்கள் இருக்கும் வரை தான் மனிதனாலும் வாழ முடியும் . செடி ,கொடிகள் ,மரங்கள் சூரிய சக்தியிலிருந்து உணவு தயாரிக்கிறது . இந்தத் தாவரங்களைச் சார்ந்து சிறிய பூச்சிகள் முதல் விலங்கினங்கள் வரை வாழ்கின்றன . தாவரங்களோ ,விலங்குகளோ இறந்து விட்டால் ,இவற்றை மண்ணோடு மண்ணாக மட்கச் செய்யும் பணியில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் (மட்க்குண்ணிகள்)  ஈடு பட்டுள்ளன . மட்கிப் போனவை , தாவரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகின்றன . இயற்கையில் கழிவு என்பதே இல்லை .

மனிதனுக்கு வியாதி வந்தால் ,மருத்துவரிடம் போகிறான் . மரம் ,செடி ,கொடிகள்,பூச்சிகள் ,விலங்குகள் ,நுண்ணுயிரிகள் , இவற்றுக்கு வியாதி வந்தால் யாரிடம் போகும் . உடலில் குறைபாடுள்ள மனிதர்களுக்காக நாம் கவலைப்படுகிறோம் . ஆனால் ,மற்ற உயிரினங்களில் உள்ள குறைப்பாடுகளைக்  கவனிக்க யார் இருக்கிறார்கள் .இயற்கை மட்டுமே இருக்கிறது .மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை முழுமையாக நம்புகின்றன . தங்களின் குறைப்பாடுகள் பற்றியோ ,இழப்புகள் பற்றியோ அவற்றுக்கு எப்போதுமே கவலைகள் இல்லை .தங்களை இயற்கையின் ஒரு பகுதியாகவே உணர்கின்றன .மனிதன் மட்டும் இயற்கையை நம்புவதில்லை .

எந்த உயிரினமும் ,தங்கள் தேவைக்கு மீறிய எதையும்  இயற்கையிடம் இருந்து பெறுவதில்லை . தாவரங்கள், தங்கள் தேவைக்கு மேல் உணவு தயாரிப்பதில்லை .அவை ,என்றோ பிறக்கப்போகும் தனது சந்ததிக்கு இப்போதே  எதையும் சேமிப்பதில்லை . விலங்குகள் (ஊனுண்ணிகள் ), தங்களின் பசிக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன . நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து பொருளைச் சேர்க்கும் பழக்கம் அவற்றுக்கு இல்லை . இன்றைய உணவைக் கொடுத்த இயற்கை ,நாளைய உணவையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது .

மனிதன் எப்போதும் இயற்கைக்கு விரோதமாக செயல்படுவதில் ஆர்வம் கொண்டவனாகவே இருக்கிறான் . இத்தகைய போக்கினால் அவன் சந்திக்கும் துன்பங்கள் ஏராளாம் . ஆனாலும் அவனது குணம் மாறவே இல்லை .ஆறாம் அறிவு என்னும் தலைக்கனம் அவனை ஆட்டி வைக்கிறது . இயற்கையின் உதவியில்லாமல் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறான் .இது எப்போதும் சாத்தியமில்லை . மனிதனால் இயற்கையை மீறி எதையும் செய்ய முடியாது .வெற்றி பெறுவது போல காட்டிக்கொண்டு தினமும் இயற்கையிடம் தோற்றுக் கொண்டே தான் இருக்கிறான் .

பூச்சிக்கொல்லிகள் ,உரம் ,பிளாஸ்டிக் ,மின் கழிவுகள் ,தொழிற்ச்சாலைக்   கழிவுகள்... இவையெல்லாம் சேர்ந்து நிலம் ,நீர்,காற்று என்று அனைத்தையும் பாதிக்கின்றன . நிலம் ,நீர் ,காற்று என்று எது மாசுபட்டாலும் தனக்கு ஏற்ப்படக்கூடிய பாதிப்புகள் பற்றி மட்டுமே சிந்திக்கிறான் . மாசுப்பாடுகளால் பாதிக்கப்படும் நுண்ணுயிரிகள், பூச்சிகள் ,மரம் ,செடி ,கொடிகள்,பறவைகள் , விலங்குகள் பற்றி எந்தக் கவலையும் இல்லை .மனிதனும் ஒரு சாதாரண உயிரினம் தான் .இதை உணர்ந்தாலே நம்முடைய பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் . இயற்கைக்கு  எதிராக செயல்படும் வரை ,இயற்கையை நம்பாத வரை நாமெல்லாம்  குற்றவாளிகளே !

மற்ற உயிரினங்கள் ,எதை வேண்டுமானாலும் இழப்பதற்கும் ,பெறுவதற்கும்
தயாராகவே இருக்கின்றன . இது இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை . மூன்று வேளையும் சாப்பிட வேண்டிய கட்டாயமும் இல்லை . பசிக்கும் போது மட்டுமே உணவு தேடும் . விலங்குகள் ,குறிப்பிட்ட வயது வரை மட்டுமே தங்கள் குட்டிகளுக்கு ஆதரவு தருகின்றன .அதற்குமேல் அவற்றுக்கு ஆதரவும் தருவதில்லை ,அவற்றிடம் எதையும்   எதிர்பார்ப்பதுமில்லை . எல்லாவற்றையும் இயற்கைக்கு கொடுத்து விட்டு ,தனக்குத் தேவையானதை மட்டுமே இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன .

மனிதனால் வளர்க்கப்படும் விலங்குகள் ,மனிதனை விட உயர்ந்ததாகவே மதிக்கப்படுகின்றன . சில இடங்களில் பசுவின் சிறுநீர் புனிதமானதாக கருதப்படுகிறது .பசுவின் சாணம் எருவாகவும் ,எருவாட்டியாகவும் பயன்படுகிறது . மனிதக் கழிவு ???  பூமியில் இதுவரை எத்தனையோ உயிரினங்கள் தோன்றி , வாழ்ந்து அழிந்துவிட்டன .எதிர்காலத்தில் இதில் மனிதனும் இடம் பிடிக்கலாம் .

மனிதர்களே இல்லாத பூமி கம்பீரமாக சுழலக் கூடும் !



மேலும் படிக்க :

நீரின்றி அமையாது உலகு ! 

வேடந்தாங்கலில் ஒரு நாள் !  
............................................................ 

Monday, November 21, 2011

திண்ணைப் பேச்சு வீரரிடம் !

திண்ணை ,இதை நாம்  மறந்து ரொம்ப நாளாகிவிட்டது .இந்தப்பாடல் திண்ணையைப் பற்றிச் சொல்லவில்லை . வெட்டிக்கதைகள் பேசி நம் நேரத்தை வீணடிக்கும் ,வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்களாக இருக்கும் வீணர்கள் பற்றி இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .பதிபக்தி என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றது .

திண்ணை ,இன்று இல்லை . ஆனால் , அதிக எண்ணிக்கையில் ,பல்வேறு விதமான இடங்களில் திண்ணைப் பேச்சு வீரர்கள் இன்றும் இருக்கிறார்கள் . இன்றைய சூழ்நிலையில்  தொ(ல்)லைக்காட்சியில் தான் திண்ணைப் பேச்சு வீரர்கள் அதிகம் தோன்றுகிறார்கள் . ராசிபலன் சொல்பவர்,அதிர்ஷ்டகல் விற்பவர், யந்திரம் விற்பவர் ,ரியல் எஸ்டேட் விளம்பரங்களில்  பேசுபவர்கள் (சின்னத்திரை நடிகர்கள், நாடகத்தில் நடிகிறார்களோ இல்லையோ தவறாமல் ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் நடிக்கிறார்கள் ), டெலி பிராண்ட் விளம்பரங்களில் பேசுபவர்கள் ,ஏழு நாட்களில் வெள்ளையாகி விடலாம் என்று விளம்பரம் போடுபவர்கள் என்று தொ(ல்)லைக்காட்சியில் தோன்றும்  திண்ணைப் பேச்சு வீரர்களின் எண்ணிக்கை அதிகம் .

மேடையில்  அரசியல்வாதிகள் பேசும் போலியான பேச்சு , ஆன்மீகவாதிகள்  பேசும் பேச்சு ,தற்போதைய பிரதமர் பேசும் பேச்சு இவையெல்லாம் எதற்கும் உதவாத திண்ணைப் பேச்சில் அடக்கம் .இவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் பட்டுக்கோட்டையார்  அன்றே பாட்டு எழுதியிருக்கிறார் .

அந்தப்பாடல் : 


பாடல் வரிகள் : 


தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்
சரித்திரத்தைச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார்
மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்


இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் _ இந்தத் (திண்ணை…)

பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் _ அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் _ இந்தத் (திண்ணை…)

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருதவேண்டியதை மறந்தாச்சு _ பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாச்சு;
கையாலே முன்னேற்றம் கண்டாகணும் _ இந்தத் (திண்ணை…)

நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
இன்னும் _ பொம்பளைங்க ஆம்பளைங்க
அத்தனை பேரையும்வச்சு மாடாஇழுக்கிறோம் வேகமா;
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் _ இந்தத் (திண்ணை…)

 எவ்வளவு அருமையான வரிகள் !"பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்", "புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் "," கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்  சபைக்கு உதவாத வெறும் பேச்சு ".

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :

நாமெல்லாம் யார் ?

............................................................................

Saturday, November 19, 2011

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது !

1956 ஆம் ஆண்டு வெளிவந்த " பாசவலை " எனும் திரைப்படம் அதன் பாடல்களுக்காகவே அதிக நாள் ஓடியது .பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்தப்படத்தில் 5 பாடல்கள் எழுதியிருந்தார் .அதில் ஒன்று தான் இந்தப்பாடல் .  சி .எஸ் .ஜெயராமன் அவர்களால் பாடப்பட்டது .படத்திற்கு இசை , விஸ்வநாதன் ராமமூர்த்தி .இந்தப் பாடலில் ஆட்டைக் குறிப்பிடுவது போல நாட்டைக் குறிப்பிடுகிறார் ,பட்டுக்கோட்டை .

பாடல் வரிகளுக்கு  ஏற்ற வகையில் கிருபாகரன்  அவர்கள் ,காணொளியில் காட்சிகளை இணைத்துள்ளார் .

அந்தப் பாடல் இதோ :


பாடல் வரிகள் : 

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் _ பெருங்
கூட்டிருக்குது கோனாரே! _ இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒருமுடிவுங் காணாரே!
தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
எல்லாம் இப்படிப் போகுது
நல்லாருக்குள் பொல்லாரைப்போல்
நரிகள் கூட்டம் வாழுது (இநத…)

கணக்கு மீறித் தின்றதாலே
கனத்த ஆடு சாயுது _ அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம்
அதுக்கு மேலே மேயுது
பணக்கிறுக்குத் தலையிலேறிப்
பகுத்தறிவுந் தேயுது _ இந்தப்
பாழாய்ப்போற மனிதக்கூட்டம்
தானாய் விழுந்து மாயுது (இநத…)

ஆசை என்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு
பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங்கண்டு
நேரம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு
நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு _ இதைப்
படித்திருந்தும் மனக்குரங்கு
பழைய கிளையைப் பிடிக்குது
பாசவலையில் மாட்டிக்கிட்டு
வௌவால்போலத் துடிக்குது
நடக்கும்பாதை புரிந்திடாமல்
குறுக்கே புகுந்து தவிக்குது;
அடுக்குப்பானை போன்ற வாழ்வைத்
துடுக்குப்பூனை ஓடைக்குது! (இநத…)

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :

கையில வாங்கினேன் பையில போடல ...! 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!  
..................................................................................................
                

கையில வாங்கினேன் பையில போடல ...!

தான் வாழ்ந்த 29 ஆண்டுகளுக்குள் 17 தொழில்களில் ஈடுபட்டவர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ( http://www.pattukkottaiyar.com/site/?p=632) . அதனால் தான் எத்தனையோ கவிஞர்களுக்கு மத்தியில் ஒரே மக்கள் கவிஞராக திகழ்ந்தார் . திரையிசையில் பாட்டாளி மக்களின் குரலை ஒலிக்கச் செய்தார் . தனது பாடல் வரிகளையே சமூகத்தை விளாசும் சாட்டையாக பயன்படுத்தினார் .அவரது பாடலின்  வரிகள் நமக்கு மட்டுமல்ல , உலகத்துகே இன்றைக்கும் பொருந்தும் . ஈடு இணையில்லாத அந்த உன்னத கவிஞரைக் கொண்டாடுவோம் - (http://www.pattukkottaiyar.com/site/ ) .

சமீபத்தில் youtube தளத்தில் தேடலில் இருந்தபோது கிருபாகரன் என்பவர் இணைத்துள்ள காணொளிகளைப் ( வீடியோக்களைப் ) பார்க்க நேர்ந்தது .  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளுக்கு பொருத்தமான படங்களைத் தேர்வு செய்து பாடலுடன் இணைத்து  காணொளிகளை உருவாக்கியுள்ளார் . அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது .கிருபாகரன் அவர்களுக்கு நன்றி . அதில் ஒரு பாடல் "கையில வாங்கினேன் பையில போடல..."

1960 ஆண்டு வெளிவந்த " இரும்புத்திரை " என்னும் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றது .இந்தப்படத்தைத்  தயாரித்து இயக்கியவர், திரு .எஸ் .எஸ் .வாசன் அவர்கள் .சிவாஜி கணேசன் ,வைஜெயந்தி மாலா ,தங்கவேலு ,சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர் .இந்தப்பாடல் பட்டுக்கோட்டையால் எழுதப்பட்டு ,திருச்சி லோகநாதனால் பாடப்பட்டு ,வெங்கட்ராமன் என்பவரால் இசையமைக்கப்பட்டு ,தங்கவேலு  அவர்களால் வாயசைக்கப்பட்டது .தங்கவேலு சிறப்பாக நடித்திருப்பார் .(அவர் நடிப்பைத் திரைப்படத்தில் தான் பார்க்க முடியும் " )


கையில வாங்கினேன் பையில போடல ...!




பாடல் வரிகள் :
கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே _ என்
காதலிப் பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதென்றும் புரியலே
ஏழைக்கும் காலம் சரியில்லே

மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான் _ வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே…)

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக்கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே _ அது
குட்டியும் போடுது வட்டியிலே (கையிலே…)

விதவிதமாய்த் துணிக இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு -அண்ணே        -எதை
எண்ணமிருக்கு வழியில்லே _ இதை
எண்ணாமிலிருக்கவும் முடியல்லே (கையிலே…)

கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு _ அண்ணே
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? (கையிலே…)

இந்தப்பாடல் இன்றைய சூழலுக்கும் அப்படியே  பொருந்துகிறது .

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!  
......................................... ..................................................

Tuesday, November 15, 2011

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி !

நாடகக்கலையின் தொடர்ச்சி தான் சினிமா .எல்லாவிதமான  நாடகங்களிலும் நகைச்சுவை நடிகர்கள் தேவைப்பட்டார்கள் .சினிமாவிலும் அப்படியே .பிரச்சனைகளுக்கு நடுவே வாழும் நம்மைச் சிரிக்க வைப்பது கடினம் . நகைச்சுவை நடிகர்கள் இதைச் சாத்தியப்படுத்தினார்கள் .தமிழ்த் திரையுலகில் பவனி வந்த நகைச்சுவை நடிகர்கள் ஏராளம் . T.S.பாலையா ,M.R.ராதா ,N.S.கிருஷ்ணன் ,K.A.தங்கவேலு ,காளி .N.ரத்னம் ,சந்திரபாபு ,V.K.ராமசாமி , நடிகர் கருணாநிதி,நாகேஷ் ,சுருளிராஜன் ,சோ ,என்னத்த கண்ணையா , தேங்காய் சீனிவாசன் ,கவுண்டமணி ,செந்தில் ,கல்லாபெட்டி சிங்காரம் ,S .S.சந்திரன் ,ஜனகராஜ் ,உசிலைமணி ,ஓமக்குச்சி நரசிம்மன் ,லூசு மோகன் , வெண்ணிறாடை மூர்த்தி , குமரிமுத்து , குண்டு கல்யாணம் , மௌலி ,விசு  என்று பெரிய பட்டியல் உள்ளது .

T.S.பாலையாவும்  , M.R.ராதாவும்  அசாத்தியமான நடிகர்கள் .T.S.பாலையா,எந்தவிதமான கதாப்பாத்திரமாக இருந்தாலும் அலட்டிக்காமல் நடிக்கக்கூடியவர் . M.R.ராதா , தனது கலகக் குரல் மூலம் கதாநாயகன் , நகைச்சுவை ,வில்லத்தனம் என்று பகுத்தறிவு கருத்துக்கள் பரப்பியவர் .
காளி .N.ரத்னம் , M.G.R.ருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் . " சபாபதி " என்ற படத்தைப் பாருங்கள் அவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார் .

N.S.கிருஷ்ணன் , சிரிப்புடன் சிந்தனைகளைக் கலந்தவர் . சிந்தனைகளை வழங்குவதிலும் ,செல்வத்தை வழங்குவதிலும் கடைசி வரை வள்ளலாக வாழ்ந்தவர் . சந்திரபாபு , சிறந்த பாடும் முறையாலும் ,நடனத்தாலும் வசீகரித்தவர் . அவர் பாடிய பாடல்கள் இன்று வரை பெருமளவில் ரசிக்கப்படுகின்றன . K.A.தங்கவேலு , தான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் சிரிப்பாக மாற்றும் கலை இவருக்கு  மட்டுமே வாய்த்தது .  நடிகர் கருணாநிதி , வித்தியாசமான குரலாலும் ,உடல் மொழியாலும் சிரிக்க வைத்தவர் .

நாகேஷ் ,சிறந்த நடிகர் ,வித்தியாசமான உடல் மொழியால் நகைச்சுவையைத் தாண்டியும் நடித்தவர் .V.K.ராமசாமி , குணச்சித்திர நடிகரும் சிரிக்க வைக்கலாம் என்பதை உணர்த்தியவர் . தனது சிரிப்பால் நம்மைச் சிரிக்கவைத்தவர் .இவரை நினைக்கும் போதெல்லாம் இவரது சிரிப்பொலி ( க்கா கா கா க ) கேட்கிறது . அதுவும் V.K.ராமசாமியும் நாகேஷும் சேர்ந்துவிட்டால் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது .சுருளிராஜன் , சுருட்டைமுடியுடன்  வேறுபட்ட குரலாலும் ,உடல் மொழியாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் .

சோ , அறிவுப்பூர்வ அரசியல் வசனங்களாலும் , அலட்டிக்காத நடிப்பாலும் சிரிப்பை வரவைத்தார் .என்னத்த கண்ணையா , சிறு சிறு நகைச்சுவை   வேடங்களில் பல காலமாக நடித்து வருபவர் ( வரு...ம் ஆனா வரா...து ) .தேங்காய் சீனிவாசன் , இழுத்து இழுத்து பேசியே நகைச்சுவையைத்  தெளித்தவர் . கல்லாபெட்டி சிங்காரம் , எளிய தோற்றத்தாலும் ,குரலாலும் ,உடல் அசைவுகளாலும் சிரிப்பைக் கொடுத்தவர் ( டார்லிங் டார்லிங் டார்லிங் ).

கவுண்டமணி , செந்திலுடன் இணைந்து நீண்ட காலம் நகைச்சுவை உலகை ஆட்சி செய்தார் . நையாண்டி வசனங்களால் கூட நடிக்கும் ஏறக்குறைய அனைத்து நடிகர்களையும் கிண்டல் செய்தவர் . குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதித்தவர் . விளம்பர வெளிச்சம் இல்லாமல் இன்றுவரை வாழ்பவர் .
செந்தில் , மிக எளிமையான ,கோமாளித்தனமான தோற்றத்தாலும் ,வித்தியாசமான கேள்விகளாலும் (அண்ணே அண்ணே )சிரிக்க வைப்பவர் . கவுண்டமணியுடன் இணைந்தும் தனித்தும் கலக்கியவர் .

ஜனகராஜ் , சிரிப்பின் மூலம் சிரிப்பை வரவழைத்தவர் . லூசு மோகன் , பேச்சின் நடுவே  பிரேக் போட்டுக்கொண்டே  சென்னைத் தமிழை நகைச்சுவையாக்கியவர் .  வெண்ணிறாடை மூர்த்தி ,வாயால் வண்டி ஓட்டிக்கொண்டே ,இரட்டை அர்த்த வசனங்களால் புகழ் பெற்றவர் .  மௌலி மற்றும் விசு ,வசனங்களால் பெயர் பெற்றார்கள் .  S .S.சந்திரன் , அவ்வப்போது அரசியல் வசனங்கள் பேசியவர் . உசிலைமணி( " நரசூஸ் காபி பேஷ் பேஷ் நன்னா இருக்கு "  இன்னும் காதில் கேட்கிறது  ),ஓமக்குச்சி நரசிம்மன் , குமரிமுத்து மற்றும்  குண்டு கல்யாணம் , தங்களது வேறுபட்ட உடல் அமைப்பால் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்கள் .

ஒட்டுமொத்தத்தில் நல்ல குரல் வளம் உடையவர்களும் , தங்கள் உடல் மொழியைச்  சிறப்பாகப்  பயன்படுத்தியவர்களால்  தான் நம்மைச் சிரிக்கவைக்க முடிந்தது .வசனத்தை உச்சரிக்கும் விதத்திலும் ,வேறுபட்ட உடல் மொழியாலும்  சிரிப்பைக் கொண்டுவருவதுதான் நகைச்சுவையாளர்களின் சாமர்த்தியம் .   

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி சொல்வோம் !

மேலும் படிக்க :

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !

...................................................................................

Saturday, October 22, 2011

ஈட்டி எட்டுறமுட்டும் பாயும் , பணம் பாதாளமுட்டும் பாயும் !

" ஈட்டி எட்டுறமுட்டும் பாயும்   , பணம் பாதாளமுட்டும் பாயும்  " தேர்தல் முடிவின் போது காதில் விழுந்த பழமொழி . பதவிக்காக ஏராளாமான பணம் செலவளிக்கப்பட்டுள்ளது . மெம்பருக்காக நின்றாலும் , தலைவருக்காக நின்றாலும் வாக்காளருக்கு பணம் கொடுத்தே ஆக வேண்டிய  கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல . வாக்காளருக்கு பணம் கொடுத்தவர்கள் மட்டுமே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் . 

பதவிக்காக மனிதன் என்னவெல்லாம் செய்வான் என்பதை மக்கள் நேரடியாக பார்த்த தேர்தலாக , இந்தத் தேர்தல் அமைந்துவிட்டது .ஓட்டுக்காக எதையும் இழக்கத் தயாராக இருந்தனர் . ஒரு வகையில் உள்ளூர் கறுப்புப் பணத்தை வெளிவர வைத்த தேர்தலாகவும் அமைந்து விட்டது . அதே சமயம் தேர்தலில் போட்டியிட்டதால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் . 

இந்தத்தேர்தலில் தமிழ்நாடு முழுக்கத் தோற்றவர்கள் மக்கள் மட்டுமே . தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டனர் . ஓட்டுக்காக பணம் வாங்குவதும் லஞ்சம் தான் . லஞ்சம் வாங்கிகொண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை அடமானம் வைத்துவிட்டனர் . 

இந்தத் தேர்தலில் "எங்கள் ஊருக்கு இதைச் செய்ய வேண்டும் "
 என்ற சத்தம் கேட்கவில்லை " எனக்கு எவ்வளவு தருவீங்க " என்ற சத்தம் தான் கேட்டது . "யார் பதவிக்கு வந்தாலும் எதுவும் செய்யப்போவதில்லை ", அதனால் கிடைத்தவரை லாபம் என்று நினைத்துத்தான் பணம் வாங்குகிறோம் என்றும் , " பணம் வாங்காவிட்டால் வேட்பாளர் தப்பாக நினைப்பார் " என்பதற்க்காகத்தான் பணம் வாங்குகிறோம் என்றும் சொல்கிறார்கள் மக்களில் சிலர் .

காரணம் எதுவாக இருந்தாலும் ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவது தப்பு  தான் . உழைத்துச் சேர்க்கும் பணமே நிலைக்காத இந்தக்காலத்தில் , ஓட்டுக்காக பெற்ற  பணம் எந்த மூலைக்கு ?  உழைக்காமல் வரும் எந்தப்பணமும் நம் பணமல்ல . நம் நாட்டில் பலர்,  வாங்கும் ஊதியத்திற்கு  ஏற்ப உழைப்பதில்லை . கடுமையாக உழைப்பவர்களுக்கு போதிய ஊதியம் கிடைப்பதில்லை .

எது எப்படியோ இந்தத் தேர்தலில் பணத்துக்காக விலை போய்விட்டது ஜனநாயகம் !

பின்குறிப்பு :

திருச்சி இடைத் தேர்தலில் தி.மு.க . வாங்கிய ஓட்டுக்களை அ .தி.மு.க . வும் உள்ளாட்சித் தேர்தலில் அ .தி.மு.க .பெற்ற வெற்றியை மற்ற கட்சிகளும்  கவனத்தில் கொள்ள வேண்டும் .

மேலும் படிக்க :


.........................................

Tuesday, September 27, 2011

எங்கேயும் எப்போதும் !


திரைப்படங்களை  தங்கள்  வாழ்கையின்  ஒரு  பகுதியாக  கருதும்  சமூகத்தில்  தான்  நாம்  வாழ்ந்து   வருகிறோம் . திரைப்படங்களை  அவ்வளவு  எளிதில்  நம்மிடமிருந்து  பிரிக்க  முடியாது . கடந்த  இரண்டு  வருடங்களாக  நிறைய  நல்ல  தமிழ்ப்படங்களைப்  பார்க்கும்  வாய்ப்பைப்  பெற்று  வருகிறோம்  . அந்த  வகையில்  " எங்கேயும்  எப்போதும் " திரைப்படம்  நம்  திரையுலகை  ஒரு  புதிய  உயரத்தை  நோக்கி   நகர்த்துகிறது  .  

"எங்கேயும்  எப்போதும் " - மிகப்பெரிய  உழைப்பின்  வடிவம்  . படம்  தொடங்குவது  முதல்  படம்  முடியும்  வரை  ஒவ்வொரு நொடியிலும்  உழைப்பு  தெரிகிறது  . மிகச்சிறப்பான  திரைக்கதை  அமைப்பு  ,நல்ல  நடிப்பு , நல்ல  நல்ல  வசனங்கள்  , நல்ல  பாடல்கள்  ,நல்ல  ஒளிப்பதிவு  ,நல்ல படத்தொகுப்பு  என்று  படத்தில்  நிறைய  ' நல்ல  ' இருக்கிறது  . படத்தின்  சூழல் , சமூகத்தின்  சூழலோடு   மிகவும்  நெருங்கி  இருக்கிறது  . சென்னை நகரம்  அவ்வளவு  அழகாக  காட்டப்பட்டுள்ளது  . சென்னையைப்  பிடிக்காமல்  சென்னையில்  வாழ்ந்து  வருபவர்களுக்கு  , இனி  சென்னையைப்  பிடிக்கும் என நம்பலாம் .

அனன்யாவும்  , அஞ்சலியும்  (கொஞ்சம்  முதிர்ச்சி  தெரிந்தாலும்  ) அவ்வளவு  அழகு  (நடிப்பிலும் ) . நாடோடிகள்  படமும்  , இந்தப்படமும்  அனன்யாவின் சிறந்த  நடிப்புக்கு  உதாரணம்  . கற்றது  தமிழ்  , அங்காடித்தெரு  வரிசையில்  அஞ்சலியின்  மற்றுமொரு  சிறந்த  படம்  இந்த   " எங்கேயும்  எப்போதும்  " . தொடர்ந்து  இந்த  மாதிரியே  நடிக்கலாமே  அஞ்சலி ! இந்தப்படத்தில்  அஞ்சலி  பேசும்  வசனங்களை  இன்றைய  காதலர்கள்  கவனித்தால்  நல்லது  .

சர்வா ( " காதல்னா  சும்மா  இல்ல  " படத்துல  நடித்தவர்  தானே  ?) மற்றும்  ஜெய் 'யும்  சிறப்பாக  நடித்துள்ளனர் . ஜெய் , இந்த  மாதிரியான  படங்களை  தேர்ந்தெடுத்து  நடிக்கலாம் . சின்ன  சின்ன  கதாப்பாத்திரங்களில்  நடித்தவர்களும்  சிறப்பாக  நடித்துள்ளனர்  . படத்தின்  மிகப்பெரிய பலம்  ஒளிப்பதிவு  மற்றும்  படத்தொகுப்பு . சென்னையைக்  காட்டும்  பொது  நாமும்  சென்னையில்  இருப்பது  போலவும்  , திருச்சியைக்  காட்டும்  பொது  நாமும்  திருச்சியில்  இருப்பது  போலவும்  , பேருந்தைக்  காட்டும்  பொது  நாமும்  பேருந்தில்  இருப்பது  போலவும்  நம்மை  உணர  வைக்கிறது  ஒளிப்பதிவும்  , ஒலிப்பதிவும் . உயிரோட்டமான  சூழ்நிலைகளுக்கு   பின்னணி  ஒலி சேர்க்க  இசையமைப்பாளர்  மிகவும்  உழைத்திருக்கிறார்  .அற்புதமான படத்தொகுப்பு  , படத்திற்கு  வேகம்  கொடுக்கிறது .   

உதவி  இயக்குனர்களின்  உழைப்பும்  இந்தப்படத்தில்  தனியாக  தெரிகிறது  . இயக்குனரை  மீறி  அவர்கள்  தெரிவது  அதிசயம்  .கொஞ்சம்  தவறினாலும்  சோகமாக  மாறிவிடக்கூடிய  கதையை  அவ்வளவு   அழகாக , அதேசமயம்  அழுத்தமாக  படம்பிடித்துள்ளனர்  . நல்ல  கதைக்கரு  ,தொய்வே  இல்லாத  திரைக்கதை  , தற்போதைய  சூழலுக்குப்  பொருந்தும்  எளிமை  + இனிமை  வசனங்கள்  , சிறந்த  இயக்கம்  என்று  முதல்  படத்திலேயே  முத்திரை  பதித்து  விட்டார்  , இயக்குனர்  சரவணன்  , உங்களை  வருக  ! வருக  ! என  வரவேற்கிறோம்  .

எங்கேயும்  எப்போதும்  , எதையாவது  கற்றுக்கொள்ள  நமக்கு  வாய்ப்பு  இருக்கிறது  . இந்த   "எங்கேயும்  எப்போதும் " -விழும்   நாம்  (முக்கியமாக  ஓட்டுநர்கள் ) கற்றுக்கொள்ள  நிறைய   இருக்கிறது  . வாகனத்தை  ஓட்டும்போது   அதிக  வேகமும்  , செல்போனும்  கண்டிப்பாக  தவிர்க்கப்பட  வேண்டும்  . செல்போனைக்  கூட   தவிர்த்து  விடலாம் ? ஆனால்  வேகத்தைத்  தவிர்க்க  முடியுமா  ? தெரியவில்லை  . இன்றைய  அவசர  வாழ்க்கையில்  வேகத்தை  கவனத்தில்  கொண்டுதான்  நாம்  பேருந்திலேயே  ஏறுகிறோம்  . வேகத்தை  மட்டுமே  தேர்ந்தெடுத்தால்  வேகமாக  போய்ச்  சேர  வேண்டியது  தான்  , பாலிசி  எடுக்க  மறந்து  விடாதீர்கள் ! ?   

இயல்  , இசை  , நாடகம்  மூன்றும்  சேர்ந்தது  தான்  நமது  தமிழ்  மொழி . நாடகத்தின்  மறுவடிவமான  சினிமாவிற்கு  கொடுக்கும்  முக்கியத்துவம்  இயல்  மற்றும்  இசைக்கு  கொடுக்கப்படுவதில்லை . வாரயிதழ்களின்  அட்டைப்படங்களை  சினிமாக்காரர்களும்  , அரசியல்வாதிகளும்  மட்டுமே  அலங்கரிக்கிறார்கள் . இலக்கியத்துறையில்  ஒருவர்  எவ்வளவு  பெரிய  விருது  வாங்கினாலும்  , பெரிய  சாதனைகள்  செய்தாலும்  கவனிக்கப்படுவதேயில்லை  . இசை  என்றால்  திரையிசை  மட்டும்  தான்  என்ற  அளவில்  சுருங்கி  விட்டது  . எவ்வளவோ  திரைப்படங்கள்  எடுக்கப்படுவது  போல்  , எவ்வளவோ  புத்தகங்கள்  எழுதப்படுவது  போல்  இசையிலும்  எவ்வளவோ  செய்யலாம்  . இயல் , இசை  ,நாடகம்  மூன்றையும்   இதன்  வரிசைப்படியே  கொண்டாடலாம் . இந்த  மூன்றின்  வளர்ச்சியில்  தான்  அடங்கியுள்ளது  நம்  மொழியின்  வளர்ச்சி .

வாழ்க  வளமுடன் ! 

மேலும் படிக்க :


....................................................................... 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms