Wednesday, February 29, 2012

உனக்காக எல்லாம் உனக்காக ..!

தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படும் பாடல்களாக இருப்பவை சந்திரபாபுவின் பாடல்கள் .அவரது பாடும் தொனியும் ஆடும் நடனமும் அலாதியானது .அந்த வரிசையில் " உனக்காக எல்லாம் உனக்காக.." பாடலுக்கு தனி இடம் உண்டு . விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த " புதையல் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . இந்தப்பாடலை எழுதியவர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . பொதுவுடைமை பாடல்கள் மட்டுமல்ல அற்புதமான காதல் பாடல்களையும் எழுதியவர் தான் பட்டுக்கோட்டையார் .

அந்தப்பாடல் :



பாடல் வரிகள் :

உனக்காக எல்லாம் உனக்காக _ இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக

எதுக்காக கண்ணே எதுக்காக? _ நீ
எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக?
கண்ணுக்குள்ளேவந்து கலகம்செய்வதும் எதுக்காக? _ மெள்ளக்
காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக ( உனக்காக…)

பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா? _ இல்லே
பயித்தியமாய்ப் பாடியாடி நடிக்கணுமா?
துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா? _ சொல்லு
சோறுதண்ணி வேறுஏதுமில்லாமெக் கெடக்கணுமா?

இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தைஇங்கேருந்தே தாண்டிடுவேன்;
மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் _ இடி
மின்னல்மழை புயலானாலும் துணிஞ்சு இறங்கிடுவேன் (உனக்காக…)

என்னே காதல் ததும்பும் வரிகள் !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

ராக் அண்ட் ரோல் - சந்திரபாபு நடனம் 

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது ! 
.................................................................................................................................................................... 

Saturday, February 25, 2012

சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !

அதிகார மையத்தின் கைகள் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகின்றன . என்ன தப்பு செய்கிறார் என்பது முக்கியமல்ல , யார் தப்பு செய்கிறார் என்பது தான் முக்கியமாகப் போய்விட்டது . சமூகத்தில் நாம் இருக்கும் இடத்தைப் பொறுத்தே நமது தப்புக்குத் தண்டனை . மற்றபடி நீதி ,நியாயம் ,சமதர்மம் என்பதெல்லாம் மண்ணை விட்டு மறைந்தே போய் விட்டது போல தோன்றுகிறது .ஆறறிவு சமூகத்தின் மிகப்பெரிய அவலம் இது . அதிகார வர்க்கம் செய்யும் அனைத்து செயல்களையும் நியாமாக்குவது தான் ஊடகங்களின் முதல் வேலையாகிவிட்டது . எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் தான் சாதாரண மனிதனின் ஒவ்வொரு நாளும் கடந்து போகிறது .

சென்னையில் இரண்டு வங்கிகளில் கொள்ளையடித்தவர்களில்  5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் . காரணம் , மக்களின் பணத்தில் சில லட்சங்கள் அவர்களால் திருடப்பட்டுள்ளது . அதற்கு தண்டனை மரணம் . என்னிடம் இருப்பது ஒரே கேள்வி தான் . மக்கள் பணத்தில் சில லட்சங்கள் திருடியவர்களுக்கே தண்டனை  மரணம் என்றால் மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கும் , அரசு அதிகாரிகளுக்கும் என்ன தண்டனை ?

திருடுவது சரி என்று நான் சொல்லவில்லை .யார் திருடினாலும் தப்பு தப்பு  தான் .தண்டனையும் தேவை தான் .ஆனால் , தண்டனை என்று வரும் பொழுது எளிய மனிதன் தான் அதிகம் பாதிக்கப்படுகிறான் . அதிகாரவர்க்கம் எவ்வளவு பெரிய தப்பு செய்தாலும் என்றுமே தண்டனை அனுபவித்ததில்லை . இதே 35,00,000 ரூபாய் மக்கள் பணத்தை ஒரு அரசியல்வாதி திருடிவிட்டான் என்று வைத்துக்கொள்வோம் . திருடப்பட்டது மக்கள் பணம் என்று கொதித்து எழும் காவல் துறை அந்த அரசியல்வாதியை  உடனே சுட்டுக்கொல்லுமா ?

வங்கிகளில் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக இவ்வளவு விரைவாக செயலாற்றிய காவல்துறை மற்ற கொள்ளைக்காரர்களுக்கு ( அரசியல்வாதிகள் இன்னும் பலர் ) எதிராக எப்போதும் பொங்காமலே இருப்பது ஏன் ? இரண்டு பிரிவிலும் திருடப்படுவது மக்கள் பணம் தான் . எந்த வித அடையாளமும் இல்லாத மனிதன் திருடும் போது அவனுக்கு கிடைக்கும் பரிசு மரணம் . பல்வேறு அடையாளங்களுடன் ( கட்சி ,பதவி ,அதிகாரம் இன்னும் பல ) திருடுபவர்களுக்கு கிடைக்கும் பரிசு புகழ் ( இன்னும் பல. ஆனால் ,கண்டிப்பாக மரணம் கிடைக்காது !?) . ஏன் இவ்வளவு பெரிய வேறுபாடு ???

 அப்ப ,என்ன தப்பு செய்கிறார் என்பது முக்கியமல்ல ,யார் தப்பு செய்கிறார் என்பது தான் முக்கியம் .அப்படித் தானே .இதைத் தட்டிக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஊடகங்கள் ,  கேள்வி கேட்பதற்கு பதிலாக அதிகாரவர்க்கத்தைப்    பாராட்டவே செய்கின்றன .என்ன கொடுமை இது ? நீதி செத்துப்போன இடத்தில் ஊடகங்கள்  மட்டும் உயிரோடவா இருக்கும் .

 இந்தத் திருட்டுக்காக 5 பேர் கொல்லப்பட்டது .சந்தேகமே இல்லாமல் நம் சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !

அடுத்த தடவ பேருந்துல போகும் போது டிக்கெட் எடுக்க மறந்துடாதிங்க , ஏன்னா உங்களையும் என்கவுன்டர்ல போட்டாலும் போட்ருவாங்க !? சூதானமா இருங்க !

Wednesday, February 22, 2012

மரங்களை வெட்டுங்கள்!!

காட்டு கருவேல மரம் ,சீமை கருவேல மரம் மற்றும் சீத்தை மரம் ( இவை அனைத்தும் ஒரே மரத்தின் வேறு பெயர்களா ? தெரியவில்லை ) நம் மண்ணின் வளத்தை பாதிக்கும் நஞ்சு மரங்கள் . ஆனால் , தமிழ்நாட்டில் இந்த மரங்கள் தான் எங்கெங்கு காணினும் நீக்கமற நிறைந்திருக்கின்றன . இவை அழிக்கப்படுவதின் அவசியத்தை இந்தக் கட்டுரை விளக்குகிறது .இந்தக் கட்டுரையை நிறைய பேர் படித்திருக்கலாம் .இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி  படிக்காதவர்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .இது என் சொந்த கட்டுரை அல்ல . இரவல் கட்டுரை .

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன் :

 
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )


நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே' ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள் :

 
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம் :

 
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு :

 
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

 
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம் :

 
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள் .இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
 

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்

இதை வெட்டுவதோடு நிறுத்திவிடாமல், வேரோடு புடுங்கி எறியுங்கள்..உங்கள் ஊர் பள்ளி ஆசிரியரை சந்தித்து இதை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் உருவாக்கச்  சொல்லுங்கள்.
 

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! 

நம் மண்ணின் மாண்பை காப்போம்..!! 

பின்குறிப்பு :
அறிவியல் படி பார்த்தால்  இந்த மரங்கள் தமிழ்நாட்டின் வெற்றியாளர்கள் தான் . எத்தனையோ வகையான மரங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்  இந்த வேளையில் இவை தங்களின் இருப்பை நிலை நிறுத்திக் கொண்டுள்ளன . வலுத்தது நிலைக்கும் !

மேலும் படிக்க :

 நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ? 

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 
..................................................................................................................................................................... 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms