Tuesday, August 21, 2012

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

நாடோடிகளாக அலைந்து திரிந்த மனித இனம் ஒரே இடத்தில் தங்கி நாகரிக வாழ்க்கை வாழ வழிவகுத்த முதன்மைத் தொழில் தான் "விவசாயம் " . விவசாயத்தின் இன்றைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது .விவசாயம் இவ்வளவு மோசமான நிலையை அடைந்த பிறகும் எந்தவிதமான ஆதரவும் இல்லாமல் நிர்கதியாய் நிற்கிறான் விவசாயி . தொழில்துறைக்கும் ,சேவைத்துறைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் விவசாயத்திற்கு கொடுக்கப்படவில்லை .விளைவு ,விவசாய நிலம் சுருங்கி விட்டது ; விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது ;விலைவாசி உயர்ந்துவிட்டது .
அரசு , தொழில்துறை வளர்ச்சிக்கும் , சேவைத்துறை வளர்ச்சிக்கும் கொடுக்கும் சலுகைகளால் நேரடியாக வருமானத்தைப் பெறுகிறது . ஆனால் ,விவசாயத்திற்கு  கொடுக்கும் சலுகைகளால் அரசிற்கு நேரடியாக வருமானம் கிடைப்பதில்லை . அதனால் விவசாயம் ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது .வளர்ச்சியின் பெயரால் விவசாயம் மற்றும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன .விவசாயம் செய்யத் தெரிந்த மனிதர்களின்  எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது . விவசாயம் செய்ய ஏறக்குறைய 60 கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் (உழுதல் ,விதைத்தல் ,நீர் பாய்ச்சுதல் ,களை பறித்தல் ,அறுவடை செய்தல்......) தெரிந்திருக்க வேண்டும் . பரம்பரை பரம்பரையாக சொல்லிக்கொடுக்கப்பட்ட தொழில்நுட்பங்களில் இன்று பாதி தான் மிச்சம் இருக்கிறது . அதையும் கற்றுக்கொள்ள இன்று ஆட்கள் இல்லை .

விதை இழப்பு அடுத்த காரணம் . தலைமுறை தலைமுறையாக தங்கள் உயிரை விட மேலானதாக பாதுகாத்து வைக்கப்பட்ட பல்வேறு விதமான விதை வகைகளை இழந்துவிட்டோம் . நெல்லில் மட்டும் நூற்றுக்கணக்கான நெல் ரகங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது . இன்று அவற்றில் பத்து ரகங்கள் இருந்தாலே ஆச்சரியம் தான் . நெல்லில் மட்டும் இவ்வளவு இழப்பு மற்ற தானியங்கள் புழக்கத்தில் இல்லாத அளவிற்கு மறைந்து விட்டன . இன்று விவசாயம் செய்ய வேண்டுமானால் விதையை அங்காடியில் தான் வாங்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது . பசுமைப் புரட்சியின் விளைவு இது .

பாரம்பரிய தானிய வகைகள் அழிந்து போக பசுமைப்புரட்சி தான் முக்கிய காரணம் . மரபு விதைகளை அழித்தது, மகசூல் அதிகரிக்கச் செய்தல் என்ற பெயரில் மீண்டும் முளைக்காத கலப்பின விதைகளை அறிமுகப்படுத்தி மண்ணின் வளத்தைக் கெடுத்தது , விதவிதமான பூச்சி மருந்துகள் மூலம் மண்ணை நஞ்சாக்கியது ,பயிர்களுக்கும் ,மனிதர்களுக்கும் விதவிதமான நோய்களை உருவாக்கியது ,சுயசார்பு  வேளாண்மையை அழித்தது , விவசாயத்தை வணிகம் சார்ந்ததாக மாற்றியது  இவைதான் பசுமைப் புரட்சியின் சாதனை என்பது .  அன்றைய சூழலைச் சமாளிக்க உதவிய பசுமைப்புரட்சி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது .

தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்தவர்களின் இன்றைய தலைமுறை விவசாயம் செய்யவில்லை ;வேறு வேலைகளைத் தேடிக்கொண்டு நகர்புறங்களுக்குச் சென்று விட்டனர் . விவசாயம் செய்வது என்பது சமூகத்தில் மிகவும் மதிப்புக் குறைந்த தொழிலாக மாறிவிட்டது .தங்கள் குழந்தை  எதிர்காலத்தில் ஒரு விவசாயியாக வர வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் விரும்புவதில்லை . ஏன் ஒரு விவசாயியே தன் குழந்தை விவசாயம் செய்வதை விரும்பவில்லை .காரணம் , விவசாயத்தைப் பாதித்துள்ள பல்வேறு விதமான காரணிகள் .

விவசாயம் தொடர்ந்து செய்வதால் ஏற்படும் வருவாய் இழப்பு .தொடர்ந்து விவசாயம் செய்ய தடையாக இருக்கிறது . கடந்த வாரம் ஒரு விவசாயி சொன்னார், " கடந்த வருடம் மட்டும் 3 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது . விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை .ஆட்கள் கிடைத்தாலும் 150 ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் வேலையாவதில்லை ,அதனால் இந்த வருடம் எதுவும் பெருசா பண்ணல .இருக்கும் இடங்களில் தென்னை மற்றும் நெல்லி மரங்களை நட்டுவிட்டேன் .விவசாயத்தை விட மனசில்லை ஆனாலும் என்ன செய்ய ,மகன்கள் வெளியூரில் தங்கிவிட்டனர்,பாடுபட ஆள் இல்லை  " .இன்றைய நிலை இது தான் .

காலநிலை மாற்றங்களால் சரியான நேரத்தில் மழை பெய்வதில்லை . உதாரணமாக  ஆடி மாதத்தில் மழை பெய்யும் ,எதாவது விதைக்கலாம் என்று காத்து இருந்த வானம் பார்த்த பூமிக்காரர்கள் ,மழை பெய்யாததால் ஏமாந்து போயினர் . மிதமிஞ்சிய வெப்பமும் விவசாயத்தைப் பாதிக்கிறது .பயிர் அறுவடை நேரத்தில் பெய்யும் மழை விவசாயியை கடனாளியாக்குகிறது . கிணற்றில் நீர் அதிகம் உள்ள நிலங்களில் விவசாயம் பார்க்க ஆட்கள் இல்லை . மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் விளைவாக விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை .

விவசாயத்தில் மட்டுமல்லாமல் ,எந்த வேலையிலும் உடலுழைப்பு சார்ந்த வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை . எல்லோரும் வியர்வை சிந்தாமல் சொகுசாக வாழ விரும்புகிறோம் . அதானால் தான் இன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வட இந்தியர்கள் ,உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் மிகவும் குறைவான சம்பளத்திற்கு அமர்த்தப்படுகின்றனர் .நாம் அதிக உடலுழைப்பு இல்லாமல் அதிகமாக உண்டு மருத்துவமனைகளின் தயவில் உயிர் வாழ்கிறோம் .

நகரமயமாக்கலின் விளைவாக விளைநிலங்கள் படிப்படியாக அழிக்கப்படுகின்றன . அதிக பணத்தின் மூலம் விவசாய நிலங்கள் விலைபேசப்பட்டு வாங்கப்படுகின்றன . அவை பிளாட் போட்டு கூவி கூவி விற்கப்படுகின்றன .விவசாய நிலமாக இருந்ததில் தான்  இன்று புதிதாக கல்வி நிலையங்கள் , தொழிற்சாலைகள் ,வீடுகள் கட்டப்படுகின்றன . எந்தவிதமான புதிய கட்டுமானமும் சுற்றுச்சூழலை பெருமளவில் பாதிக்கிறது . மணல் ஆற்றை நாசப்படுத்தி எடுக்கப்படுகிறது . கற்கள்,ஜல்லிகள் பாறையை அல்லது மலையை உடைத்து எடுக்கப்படுகின்றன .செங்கல் உருவாக்க செம்மண் விவசாய நிலத்திலிருந்து எடுக்கப்படுகிறது ;செங்கலைச் சூடு பண்ண நிறைய மரங்கள் வெட்டி எரிக்கப்படுகின்றன .

கட்டுமானத்திற்கு தேவையான தண்ணீர் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவத்தின் மூலமாக பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது .
தமிழகத்தின் எந்தப்பகுதியிலும் எப்போது வேண்டுமானாலும் இனி நிலநடுக்கம் வரலாம் ;தயாராக இருங்கள்.எந்தப்புதிய கட்டுமானமும் சுற்றுச்சூழலை நேரடியாகவும் ,விவசாயத்தை மறைமுகமாகவும் பாதிக்கிறது .அதனால் ,புதிதாக நிலம் வாங்கி வீடு கட்ட நினைக்காத அனைவரும் பூவுலகின் நண்பர்கள் தான் . நம்ம சம்பாதிக்கிற பணத்தை வச்சு நிலத்தை பார்க்கத்தான் முடியும் ,வாங்க முடியாதுனு நினைக்கிறீங்களா ,சரி விடுங்க அதுவும் நல்லதுக்குத்தான் . நாமெல்லாம் பூவுலகின் நண்பர்கள் .

விவசாயம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் ,விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை . விவசாயப் பொருட்களுக்கு நிலையான விலை கிடைத்திருந்தால் விவசாயம் இவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்து இருக்காது . விவசாயிக்கு பொருளை விற்பதற்கு பெரிய சந்தை கிடைப்பதில்லை . கூடவோ குறைச்சலோ உள்ளூர் சந்தையில் மட்டுமே பொருளை விற்க முடிகிறது .எப்படிப் பார்த்தாலும் விவசாயிக்கு குறைந்த அளவே லாபம் கிடைக்கிறது ,தரகர்களும் ,பெரிய வியாபாரிகளுமே அதிக லாபம் அடைகின்றனர் .

" உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது " என்ற பழமொழி இன்றைக்கும் மிகச் சரியாக பொருந்தும் . விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போனால் விவசாயி கடனாளி ஆகிறான் . மீள முடியாத கடன் தற்கொலைக்கு தூண்டுகிறது .1997 பிறகு மட்டும் 2,20,000 கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் .நாமெல்லாம் மறைமுக குற்றவாளிகள் .தூக்குத் தண்டனையை தடை செய்ய எத்தனையோ பேர் போராடுகிறார்கள் . விவசாயிகளுக்காக போராடக் கூடிய  ஆட்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் .  விவசாய கடன் தள்ளுபடி என்பதெல்லாம் கண்துடைப்பு . விவசாய மானியங்கள் விவசாயிக்குக் கிடைப்பதற்குப் பதிலாக ரசாயன உர நிறுவனங்களுக்கும் , பூச்சி மருந்து நிறுவனங்களுக்கும் கிடைக்கிறது . எந்த விதமான மானியங்களும் கிடைக்காத காரணத்தால் தான் இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன .

விலையேற்றம் ,சமீப காலமாக எல்லோரும் உணரும் விசயம் . விவசாயம் அதிகளவில் பாதிக்கப்பட்டதால் தான் விவசாயப் பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்துவிட்டது . விவசாய நிலங்கள் அழிந்து வருவதை தினமும் பார்த்து வருகிறோம் .கடந்த ஆண்டு நெல் உற்பத்தி அளவுக்கு அதிகமாக இருந்தும் தற்போது அரிசி விலை எதனால் பெரிய அளவில் உயர்ந்தது . கிரானைட் குவாரிகளில் சோதனை நடத்தியது போல தனியாருக்குச் சொந்தமான அரிசி சேமிப்புக் கிடங்குகளில் சோதனை நடத்தினால் என்ன ? அரசிற்கு வருவாயும் ,ஊடகங்களின் பசிக்குத் தீனியும் கிடைக்கும் .பதுக்கல் திடீர் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது . அரசால் பதுக்கல் கண்காணிக்கப்பட வேண்டும் . அனைத்து விவசாயப் பொருட்களையும் இறக்குமதி செய்யக்கூடிய சூழ்நிலை வந்தால் விலையேற்றம் இன்னும் அதிகமாகும் .நிலைமை நீடித்தால் உணவிற்கான உள்நாட்டுப்போர் உண்டானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை .

விவசாயத்திற்கு எதாவது செய்ய நினைத்தால் ,முதலில் விளைபொருட்களுக்கு நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் . எந்தப் பகுதியில் எந்தப்பொருள் அதிகம் விளைகிறதோ அங்கு அந்தப் பொருளைச் சேமித்து வைக்க சேமிப்புக் கிடங்குகள் கட்ட வேண்டும் .தன்னிறைவு வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .விவசாயி ,தன்னால் விளைவிக்கக்கூடிய விவசாயப் பொருட்களை தானே உற்பத்தி செய்யும் சூழலை உருவாக்க வேண்டும் . அப்படி ஒரு சூழல் உருவானால் சந்தையில் பொருட்களின் தேவை கணிசமான அளவு குறையும் ;விலைவாசியும் கட்டுக்குள் இருக்கும் .

 மண்ணின் வளத்தை அதிகப்படுத்த தொடர்ந்து ஒரே பயிரை விளைவிக்காமல் பயிர் சுழற்சி முறையை ஊக்கப்படுத்த வேண்டும் . அரிசி ,கோதுமை மற்றும் கரும்பை மட்டும் கொள்முதல் செய்யாமல் அனைத்து தானிய வகைகளையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் .ரேசன் கடைகளில் நெல் ,கோதுமை ,சர்க்கரை மட்டும் விநியோகிக்காமல் மற்ற தானிய வகைகளையும் விநியோகம் செய்யலாம் . 

இயற்கை விவசாயத்திற்கு மானியம் வழங்க வேண்டும் . இயற்கை விவசாயத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . உணவே மருந்தாக இருந்த நிலை ,மருந்தே உணவாக மாறியதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளும் , ரசாயன உரங்கலுமே முக்கிய காரணம் .மிகக்கொடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று தெரிந்த பிறகும் " என்டோசல்பான் " பூச்சிக்கொல்லி மருந்தை தடை செய்ய மத்திய அரசு யோசிக்கிறது .நம் உடலுக்கு உகந்த நம் பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும் . துரித உணவுகள் உண்டாக்கும் தீமைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் மேற்கத்திய நாடுகளில் இருந்தே வெளிவருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .

சமூகத்தில் விவசாயத்திற்கு மரியாதை கிடைக்க வேண்டும் . " என் மகன்  ஒரு விவசாயி ஆக வர விரும்புகிறேன் " என்று பெற்றோர் நினைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் .விவசாயம் செய்ய நிலம் ? வீட்டு மொட்டை மாடிகளிலும் ,வீட்டிற்கு அடியிலும் விவசாயம் நடைபெறலாம் .உணவு ,தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருளாகக் கூட மாறலாம் .மாத்திரைகளை விழுங்குவதன் மூலம் உடலிற்கு தேவைப்படும் சக்தியைப் பெறக்கூடிய நிலை உண்டாகலாம் .இந்நிலை வராமல் தடுக்க இருக்கும் விவசாய நிலங்களையாவது காப்பாற்ற வேண்டும் .

 நிலையான லாபம் தரும் தொழிலாக விவசாயத்தை மாற்ற வேண்டும் .இந்தியா ஒரே மாதிரியான நிலப்பரப்பும் ,காலநிலையும் கொண்ட தேசமல்ல .ஒரே மாதிரியான நிலைப்பாடுகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பொருந்தாது . ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஒவ்வொரு விதமான செயல்பாடுகள் அவசியம் . நில மற்றும் நீர் பரப்புகள் வணிக நோக்கத்துடன் படிப்படியாக அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் .சுற்றியுள்ள சூழ்நிலைகள் உகந்ததாக இருந்தால் மட்டுமே நம்மால் விவசாயம் செய்ய முடியும் .

ஊடகங்கள் விவசாயத்தை தொடர்ந்து புறக்கணிக்கின்றன . 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயத்தை நம்பியுள்ள சூழலில் இதுவரை எத்தனை திரைப்படங்கள் விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன . தொலைக்காட்சி நிறுவனங்களும் விவசாயத்தைக் கண்டுகொள்வதில்லை .ஏன் ஒரு விவசாயியின் உண்மை நிலையை ஒரு நெடுந்தொடராக எடுத்திருக்கலாமே  .ஏன் எடுக்கவில்லை ?

சமூகத்தின் பிரதிபளிப்பு தான் திரைப்படம் என்றால் 100 க்கு 70 திரைப்படங்கள் விவசாயம் சார்ந்ததாக மட்டுமே இருக்க முடியும் . விவசாயம் இவ்வளவு பாதிப்புக்குள்ளான பிறகும் விவசாயியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு திரைப்படம் கூட எடுக்கப்படவில்லையே .அப்புறம் நீங்கள் என்ன பெரிய படைப்பாளிகள் ? எந்தவொரு சமூக நிகழ்வையும் சுவாரசியமாக அதே நேரம் உண்மையாகவும் ,அழுத்தமாகவும் பதிவு செய்பவர்கள் மட்டுமே உண்மையான படைப்பாளிகளாக இருக்க முடியும் .அவ்வப்போது சில சிறுகதைகளும் ,நாவல்களும் மட்டுமே விவசாயியின் உணர்வுகளை பதிவு செய்கின்றன . 

இன்று எல்லாம் வணிகம் தான் .விவசாயமும் வணிகம் சார்ந்ததாக மாறி எவ்வளவோ நாட்களாகி விட்டது . விவசாயிகளும் பணப்பயிர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சூழலை உருவாக்கி விட்டோம் . விவசாயத்தை வணிகத்தின் பிடியிலிருந்து மீட்டு உணவுப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழலை  உருவாக்க வேண்டும் .

விவசாயத்தை நோக்கி ஒரு நாள் எல்லோரும் உறுதியாக திரும்பி வருவார்கள் .இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது . எல்லாம் ஒரு வட்டம் தான் . 

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு ...!

மேலும் படிக்க :

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

ஐந்திணை சுற்றுச்சூழல் விழா 2012 !

..................................................................................................................................................


Monday, August 6, 2012

ஐந்திணை சுற்றுச்சூழல் விழா - ஒரு பார்வை !


29 -07-2012 , ஞாயிற்றுக்கிழமை , பரபரப்பான நாட்களுக்கிடையே வந்த ஒரு வசந்த நாள் . ஆம் ,உண்மையில் வசந்த நாள் தான் நம் மண்ணுக்கும் மனதிற்கும் .நம்  மண்ணைப்பற்றி நமக்கு நினைவூட்டிய நாள் .மக்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்  சென்னை நகரத்தில் ,லயோலா கல்லூரியில் நடந்தேறியது அவ்விழா . தமிழ் கூறும் நல்லுலகின் வசந்த விழா .அது , பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த " ஐந்திணை சுற்றுச்சூழல் விழா ". குறிஞ்சி ,முல்லை ,மருதம் ,நெய்தல் மற்றும் பாலை இந்தப் பேர்களைக் கேட்கும் போது எல்லோருக்கும் பள்ளிக்கூட நினைவுகளும் , தமிழ் மண்ணின் தனிச் சிறப்பும் பொங்கி வருவதைத் தடுக்க முடியாது .ஆனால் , அவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் ஐந்திணையின் இன்றைய நிலை என்ன ?

நோபெல் பரிசுக்கு இணையாக மதிக்கப்படும் " Right Livelihood Award (2008 )" வென்ற மண்ணுக்கும் மனிதர்களுக்குமான போராளியான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார் . வினோ பாவே இயக்கத்தில் தான் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் மக்களுக்காக எப்படியெல்லாம் பாடுபட்டார்கள் என்பதையும் வினோ பாவேவின் தொலைநோக்கு பார்வை குறித்தும் ,மக்கள் மேம்பாடுக்கான பணிகள் பற்றியும் குறிப்பிட்டார் .இறால் பண்ணைகள் அமைத்து கடற்கரையை நாசமாக்க முயன்றவர்களிடமிருந்து  தமிழக கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க எப்படியெல்லாம் போராடினார் என்பதையும் விளக்கிக் கூறினார் .

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மிகவும் வருத்தப்பட்ட விசயம் நம் கல்வி நிலையங்களின் அமைவிடங்கள் பற்றியது ." தடுக்கி விழுந்த இடத்திலெல்லாம் இன்ஜினியரிங் கல்லூரிகள் ;பாவிகளா ,அந்த கல்லூரிகளை எந்தப்பொருளும் விளைய தகுதியற்ற இடங்களில் கட்டலாமே .நெல் அதிகம் விளைந்த தஞ்சாவூர் எங்கும் கல்வி நிலையங்கள் .முக்கியத்துவம் அறிவுக்கா ? உணவுக்கா ? நாமெல்லாம் மாதம் முழுதும் உழைத்தாலும் போதிய பணம் கிடைப்பதே அரிது . நம்மைச் சுற்றி கொள்ளைகாரங்களா இருக்காங்க , இந்தக் கொள்ளைக்காரங்க அளவுக்கதிகமான பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கல்லூரிகள் கட்டி மறுபடியும் கொள்ளையடிக்கிறாங்க .இதப் போய் மக்கள்கிட்ட சொல்லுங்க ,விளைநிலங்களை  காப்பாத்துங்க "  என்று உருக்கமாக பேசினார் .

நம்மாழ்வார் பேசும்போதும் வினோ பாவே பற்றிக் குறிப்பிட்டார் . இளங்கோவடிகள் மற்றும் அவ்வையாரின் பாடல்களை மேற்கோள் காட்டி இன்றைய சூழலில் ஐந்திணையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பேசினார் .சூரிய ஒளி ஆற்றலை உள்ளே விட்டும் , வெப்ப ஆற்றலை வெளிவிடாத கார்பன் வளையங்கள் பற்றி குறிப்பிட்டார் .எவ்வாறு மரங்கள் கார்பன் வளையங்களைக் குறைக்கும் என்பதையும் சொன்னார் . மாலத்தீவில் கடலுக்கு அடியில் நடந்த உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பற்றிச் சொன்னது புதிதாக இருந்தது . ஹோமோ சேப்பியன் என்று சொல்லிக்கொள்ளும் நாம் "இயற்கைக்கு விரோதமானத சாப்பிட்டு இயற்கைக்கு விரோதமா சிந்திக்கிறோம் " என்று சொன்னார் .கல்விக்கூடங்களின் மோசமான செயல்பாட்டை சுட்டிக்காட்டினார் ." புத்தகங்களுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை, நம் கல்வி முறை நம்மைச் சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்றவாறு வாழ நம்மைப் பழக்கவில்லை " என்றார் .
  
காலை 9-30 முதல்  மாலை  5.00 வரை ஐந்திணைகள் பற்றிப் செயல்பாட்டாளர்கள்  பேசினார்கள் .ஐந்திணைகள் பற்றிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன . பாரம்பரிய விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது , நம் மரபு வழி விதைகளை இழந்து விட்டோம் ,உணவே மருந்து என்ற நிலை மாறிவிட்டது என்று கூறினார் அடுத்து பேசிய சுல்தான் இஸ்மாயில் . வினோ பாவே வேம்புக்கு கொடுத்த முக்கியத்துவம் குறித்துப் பேசினார் . தேசிய கொடியை சமையலறையில் ஓட்டச் சொன்னார் .எதற்கு என்றால் நாம் சாப்பிடும் உணவில் ஆரஞ்ச் ,வெள்ளை மற்றும் பச்சை நிற  உணவுகள் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் . நடுவில் உள்ள ஊதா நிறச் சக்கரம் தண்ணீரைக் குறிக்கிறது .இவ்வாறு நாம் இருந்தால் சக்கரத்தில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கையைப் போல 24 மணி நேரமும் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் .Ecology ,Economyயாக  மாறும் போது தான் பிரச்சனையே .Management , t யை எடுத்து விட்டால் Managemen , n யை எடுத்து விட்டால் Manageme என்று சுவாரசியமாகப் பேசினார் .     

குறிஞ்சி நிலப்பரப்பு குறித்து வேலூர் சி .சீனிவாசன் பேசினார் . வேலூரில் தாங்கள் செயல்படுத்தி வரும் VHRP - Vellore Hill Restoration Project பற்றிக் குறிப்பிட்டார் .மலைக் குன்றுகளில் சிறு சிறு குளங்கள் அமைப்பதும் , வறண்ட மலைக் குன்றுப் பகுதிகளைப் பசுமையாக்குவதும் இந்த செயல் திட்டத்தின் முக்கிய நோக்கம் .இதன் பயனாக மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வற்றாமல் இருக்கிறது .பயனுள்ள முயற்சியாக தெரிந்தது .

குறிஞ்சி நிலப்பரப்பு குறித்து அடுத்து பேசிய வழக்குரைஞர் இரா .முருகவேல் பழங்குடிகளுக்கும் காட்டுக்கும் ,இயற்கைக்கும் உள்ள நெருக்கம் பற்றிக் குறிப்பிட்டார் . பழங்குடிகள் தாங்கள் குடியிருக்க வீடுகள் கட்ட மூங்கிலையும் ,நாணலையும் பயன்படுதுகின்றனர் . மூங்கில் மீண்டும் வளரும் ,நாணல் காய்ந்தால் காட்டுத் தீயை அதிகப்படுத்தும் . சமவெளியில் வாழும் மக்களே காடுகளின் அழிவிற்கு காரணம் .பழங்குடிகளால் மட்டுமே காடுகளை பாதுகாக்க முடியும் ,அவர்கள் பழங்குடிகளாக இருக்கும் வரை .

முல்லை நிலப்பரப்பு குறித்து பேசிய பேராசிரியர் .த .முருகவேல் , பிணந்திண்ணி கழுகுகளின் அழிவு எவ்வாறு உயிர்ச் சூழ்நிலையை பாதிக்கிறது என்றும் காடுகளின் பரப்பு குறைவதால் சிறுத்தை போன்ற விலங்குகளை காடுகளை விட நிலப்பரப்பில் அதிகம் காண முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

முல்லை பற்றி அடுத்து பேசிய பேராசிரியர் கு.வி .கிருஷ்ணமூர்த்தி திணைச்  சிதைவு பற்றிக் குறிப்பிட்டார் . ஒரு நிலப்பரப்பில் வாழும் உயிருள்ள மற்றும் உயிரட்ட கலவையே திணை எனப்படும் .அதாவது நிலத்தோடு இயைந்த பண்பாட்டுக் கூறுகளே திணையாகும் . இன்று எந்த நிலப்பரப்பும் திணையாக இல்லை .வெறும் நிலமாகச் சுருங்கிவிட்டது அல்லது வேறு திணையின் கூறுகளோடு கலந்து விட்டது . குறிஞ்சி ,முல்லை ,மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நான்கு திணைகளும் ஒருங்கே அமைந்த மாவட்டம் ,திருநெல்வேலி . வரகு ,குதிரைவாலி ,சாமை ஆகியன முல்லையின் உணவுப்பொருட்கள் . 10000 ஆண்டுகளுக்கு முன்பு 70 % இருந்த முல்லை நிலப்பரப்பு ,இன்று 15 % குறைந்து விட்டது .

ருதம் பற்றி வைகை குமாரசாமியும் ,அறச்சலூர் செல்வமும் பேசினார்கள் .இயற்கை விவசாயம் குறித்து பேசினார்கள் . இயற்கை முறையில் சாகுபடி செய்யும் பொருட்கள் விலை ஏன் அதிகமாக உள்ளது என்று விளக்கினார்கள் .உழுதல் ,மழையைக் கணித்தல் ,விதைகளைத் தேர்ந்தெடுத்தல் , நாடு நடுதல் ,சரியாக நீர் பாய்ச்சுதல் ,சரியான நேரத்தில் களை பறித்தல் ,சாகுபடி செய்தல்  என்று  60 கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் தெரிந்த ஒருவன் மட்டுமே விவசாயியாக இருக்க முடியும் . விதையிழப்பும் , நவீன இயந்திரங்களால் தொழில்நுட்ப இழப்புமே விவசாயம் , விவசாயிகளின் அழிவிற்கு காரணங்கள் .

பாலை நிலம் பற்றி சு .தியோடர் பாஸ்கரன் பேசினார் . காங்கிரஸ் அமைப்பைத் தோற்றுவித்தவரான  A .O .ஹியூம் , பறவைகளை அவதானிப்பதில் வல்லவராக இருந்திருக்கிறார் . அவர் Bustard என்று அழைக்கப்படும் கான மயிலைப் பார்த்திருக்கிறார் . இதுவே இந்தியாவின் தேசிய பறவையாக இருந்திருக்க வேண்டியது .Bustard  என்ற வார்த்தை தவறாக உச்சரிக்கப்பட்டால் தவறாகப் போய்விடும் என்ற காரணத்தால் தேசிய பறவையாக இடம் பெறவில்லை . இது பாலை நிலத்தின் பறவையாகும் . முன்பு தமிழ்நாட்டில் அதிகளவில் இருந்த கான மயில்கள் தற்போது இல்லை . மத்திய பிரதேசத்திலும்  ,கர்நாடகாவிலும் உள்ள சரணாலயங்களில் மட்டுமே தற்போது கான மயில்கள் உள்ளன . காடை ,கள் கவுதாரி ,ஆள்காட்டிக் குருவி முதலிய பறவைகளும் ,குள்ள நரி ,குழி நரி ,காட்டுப்பூனை முதலிய விலங்குகளும் பாலை நிலத்தில் வாழ்ந்துள்ளன . பாலை நிலத்தில் வாழ்ந்தவர்கள் பிங்களர்கள் என்று அழைக்கப்பட்டனர் . துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதன் பின்பு தான் அதிகமான காட்டுயிர்கள் கொல்லப்பட்டுள்ளன . இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு தான் அதிக காடுகளும் ,காட்டுயிர்களும் அழிக்கப்பட்டுள்ளன .அணைகள் கட்டுவதால் பாலை நிலம் அழிகிறது .

 கான மயில் :


நெய்தல் நிலம் பற்றிப்  பேசிய வறீதையா அழுத்தமான கருத்துகளை முன்வைத்தார் . வரலாற்றிலும் சரி தற்போதும் சரி நெய்தல் நில மக்களான பரதவர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை ." மீனை உணவாக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள் , மீன் தான் எங்கள் வாழ்க்கை என்பதை நீங்கள் உணரவேயில்லை "  என்று சாடினார் . சேது சமுத்திரத் திட்டத்தின் காரணமாக பவளப்பாறைகள் சேதப்படுத்தப் பட்டதால் தான் சுனாமியின் காரணமாக நாகபட்டினமும் ,வேளாங்கண்ணியும் அதிகளவு பாதிக்கப்பட்டன ;பவளப் பாறைகளால் ராமேஸ்வரமும் ,கன்னியாகுமரியும் தப்பித்துக் கொண்டன .

நெய்தல் நிலம் பற்றி அடுத்து பேசிய அருள் எழிலன் , நெய்தல் நில மக்கள் குறித்த நீண்ட  வரலாற்றை  பதிவு செய்தார் . கிறித்துவம் நெய்தல் நில மக்களுடன் எப்படிக் கலந்தது ,தற்போது எப்படி உள்ளது என்று விளக்கினார் . புன்னைகாயல் என்னும் இடத்தில் தான் தமிழகத்தின் முதல் அச்சகமும் ,முதல் மருத்துவமனையும் மற்றும் முதல் கல்விக்கூடமும் இருந்ததாக குறிப்பிட்டார் . சென்னையில் கடலை நம்பி வாழ்ந்தவர்கள் கண்ணகி நகருக்கும் ,செம்மஞ்சேரிக்கும் துரத்தி அடிக்கப்பட்டது குறித்தும் வேதனையுடன் குறிப்பிட்டார் .ஜோ .டி .குரூஸ் நெய்தல் நில உரைகளுக்கு தலைமை தாங்கினார் .

மொத்தத்தில் வளர்ச்சி என்ற பெயரால் எல்லாவற்றையும் அழித்துக்கொண்டிருக்கிறோம் . இப்படியே போனால் ஐந்திணை என்பதே இருக்காது .ஒரே திணையான காங்கிரட் திணை மட்டுமே இருக்கும் .

மாலை 5 மணிக்கு மேல் இருளர் பழங்குடி மக்களின் களை நிகழ்ச்சிகளும் ,கொல்லிமலை மலையாளி பழங்குடிகளின் சேர்வையாட்டமும் நடைபெற்றது . அடுத்ததாக சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டன .சிறு தானிய உணவுகளில் உள்ள சத்துகள் குறித்து சித்த மருத்துவர் கு .சிவராமன் தெளிவாக விளக்கிக் கூறினார் . நீண்ட நாட்களாக நான் பார்க்க விரும்பிய மருத்துவர் புகழேந்தியைச் சந்திக்க முடிந்தது .முடிவாக பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது .


அந்த உணவில் இடம்பெற்ற உணவு வகைகள்,
1.பானகம்
2.தேனும் தினை மாவும்
3.காணச்சாறு( கொள்ளு )
4.கம்பு வல்லாரை தோசை
5.நிலக்கடலைச் சட்னி
6.சாமை தயிர்சோறு
7.வழுதுணங்காய் ( கத்தரிக்காய் )  சாம்பார்
8.பருப்புக்கீரை மசியல்
9.குதிரைவாலி புளிச்சோறு
10.ராகி வாழைப்பூ வறுத்த சோறு
11.வரகு கூட்டாஞ்சோறு
12.தட்டைப்பயறு பிரட்டல்
13.தினை இனிப்புப் பொங்கல்
14.நவதானிய கொழுக்கட்டை
கிராமத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் சாமை ,வரகு ,தினை , குதிரைவாலி சாப்பிட்டதில்லை .இந்நிகழ்வின் மூலம் இவற்றையெல்லாம் உண்ணவும் ,உணரவும் முடிந்தது . எங்கள் வீட்டில் சிறு தானிய உணவுகளை சேர்த்துக்கொள்ளத் தொடங்கிவிட்டோம் .

இனம் ,மொழி ,மதம் ,நாடு போன்ற பேதங்களில் சிக்க வேண்டாம் என்று தான் இருக்கிறேன் . ஆனால் , நம் முன்னோர்கள் பிரித்த இந்த ஐந்திணை என்னை பெருமைப்பட வைக்கிறது . உலகில் வேறு எங்கும் இது போல நிலத்தை பிரித்து வாழ்ந்தார்களா என்று தெரியவில்லை .

பூவுலகின் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ..!

 பூவுலகின் நண்பர்களின் இணையதளம் :-  www.poovulagu.net .

 ஐந்திணை சுற்றுச்சூழல் விழா - காணொளி -http://www.periyarthalam.com/2012/07/31/ainthinai-vizha-videos/

மேலும் படிக்க : -

நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ?

நாமெல்லாம் குற்றவாளிகளே !
.....................................................................................................................................................................

Thursday, August 2, 2012

விகடன் வலையோசையில்...!

ஆனந்த விகடன் எனக்கு அறிமுகம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன .இதுவரை வாங்கிப் படித்த அனைத்து ஆனந்த விகடன் பிரதிகளையும் சேமித்து வைத்துள்ளேன் . தற்போது தமிழில் வெளிவரும் வார இதழ்களில் ஆனந்த விகடனே சிறந்தது .இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை . 16-05-2012 தேதியிட்ட ஆனந்த விகடன் வரவேற்பறையில் ! எனது வலைப்பூ இடம்பெற்றது . அதைப்பற்றி எனது வலைப்பூவில் குறிப்பிடும் போது " கடந்த இரண்டு மாதங்களாக விகடன் படிப்பதில்லை " என்று குறிப்பிட்டிருந்தேன் . அதற்கு கடும் எதிர்ப்பு , உங்கள் வலைப்பூவே விகடன் மூலம் தான் எங்களுக்குத் தெரிந்தது ஆனால் நீங்கள் ஏன் விகடன் படிக்கவில்லை ? என்று கேள்வி எழுப்பினார்கள்  இப்போதும் விகடன் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கவில்லை .

ஒட்டு மொத்த ஊடகங்கள் மீதான கோபம் தான் விகடன் படிக்காததற்கும்  காரணம் . பொதுவாக எந்தப் புத்தகம் படித்தாலும் முன்பக்க அட்டை முதல் பின்பக்க அட்டை வரை படித்துத் தான் பழக்கம் . சமீப கால ஆனந்த விகடனை அவ்வாறு படிக்க முடியவில்லை . சினிமாக்காரர்களின் சொந்த வாழ்க்கையைத் தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் ? நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தால் சினிமாக்காரர்கள் வாழ்க்கையை விட சுவாரசியமாகவே இருக்கும் . அப்படி இருக்கும் போது நமக்கெதுக்கு சினிமாக்காரர்களின் சொந்த வாழ்க்கை .  அடுத்து அதிகமாக இடம்பெறுவது ,அரசியல்வாதிகளின் சுயபுராணம் .   

விகடன் மட்டுமல்ல பெரும்பான்மையான ஊடகங்கள் சினிமாக்காரர்களையும் ,அரசியல்வாதிகளையும்  மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது . இந்தக் கோபம் தான் விகடன் படிக்காததற்கு காரணம் . மற்றபடி நம் சமூகத்திலிருந்து சினிமாவையும் ,அரசியலையும் பிரிக்க முடியாது . அரசியல் குறித்தும் , நல்ல சினிமா குறித்தும் ஆக்கப்பூர்வமான ,அவசியமான விவாதங்கள் அவசியம் .விகடன் படிக்கவில்லை என்றாலும் " இன்று ஒன்று நன்று " தொடர்ந்து கேட்டுவருகிறேன் .தற்போதைய விகடனில் " வட்டியும் முதலும் " ," நானே கேள்வி நானே பதில் " ," சிறுகதைகள் ","ஓவியங்கள் " , " கார்டூன் " ,"தலையங்கம் " ," வலைபாயுதே (சினிமா மற்றும் அரசியல் தவிர்த்த பதிவுகள் ) " போன்ற பகுதிகள் ரசிக்கும்படி உள்ளன . ஆனாலும் மிதமிஞ்சிய அரசியல் , சினிமா செய்திகளால் விகடன் தொடர்ந்து படிக்க முடியவில்லை . என்று தோன்றுகிறதோ அன்று தொடர்ந்து படிக்க ஆரம்பித்து விடுவேன் .

25-07-12 தேதியிட்ட ஆனந்த விகடன், என் விகடன் மதுரை பதிப்பில் எனது வலைப்பூ இடம் பெற்றுள்ளது.






நன்றி :- விகடன் .


மேலும் படிக்க :

ஊடகங்களும் அரசியல் முதலாளிகளும் !


விகடன் வரவேற்பறையில் !


.....................................................................................................................................................................


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms