Monday, August 31, 2015

மரணத்திற்கும் விலை உண்டு !

இயற்கையில் மரணம் என்பது எப்போதும் எங்கேயும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.மனிதன் ஒரு அறிவுள்ள சுயநல விலங்காக இருப்பதால் தன் இனமான மனிதர்களின் மரணங்களை மட்டுமே பெரும்பாலும் கணக்கில் கொள்கிறான்.மற்ற உயிரினங்களின் மரணங்கள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை; புள்ளிவிவரங்களுடன் கணக்கை முடித்து விடுகிறான்.உலகவணிகமயமாக்கலின் தாக்கமும் , விளம்பரமயமாதலின் தாக்கமும் இந்த மனிதர்களின் மரணத்தையும் விட்டு வைக்கவில்லை .

மரணம் என்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும் , குடும்பம் என்ற அமைப்பிலிருந்து நிகழும் மரணங்கள் அந்ததந்த குடும்பங்களுக்கு இழப்பு தான் . அது யானைக் குடும்பமாக இருந்தாலும் சரி , பறவைக்  குடும்பமாக இருந்தாலும் சரி , பட்டாம்பூச்சிக்  குடும்பமாக இருந்தாலும் சரி , மனிதக் குடும்பமாக இருந்தாலும் சரி , மற்ற எந்த உயிரினக் குடும்பமாக இருந்தாலும் இழப்பு இழப்பு தான். நாம் மனித மரணங்களை மட்டுமே கணக்கில் கொள்வோம் என்றாலும் அவையும்  சமமாக மதிப்பிடப்படுவதில்லை.

மனித மரணம் நிகழ்கின்ற இடமும் , அது பெறுகிற விளம்பர வெளிச்சமும் பொது சமூகத்தின் , ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெறுகிறது. எந்தவித கவனமும் பெறாத மனித மரணங்கள் பொது சமூகத்தாலோ , ஆட்சியாளர்களோ கண்டு கொள்ளப்படுவதில்லை. பல மரணங்கள் உறவுகளால் கண்டுகொள்ளப் படுகின்றன; சில மரணங்கள் யாராலும் கண்டுகொள்ளப் படுவதில்லை.

விபத்தால் நிகழும் திடீர் மரணங்களுக்கு அரசுகளால் இழப்பீடு வழங்கப்படுகின்றன. இந்த இழப்பீடுகளும் சமமாக இருப்பதில்லை. ஐம்பதாயிரம் ,ஒரு இலட்சம் , இரண்டு இலட்சம் , ஐந்து இலட்சம் , பத்து இலட்சம் என்று நிர்ணயம் செய்கிறார்கள்.சட்டத்தின் முன் மக்கள் எல்லோரும் சமம் என்று சொல்லும் ஒரு ஜனநாயக நாட்டில் எதன் அடிப்படையில் இழப்பீடை நிர்ணயம் செய்கிறார்கள் என்பது புதிராகவே உள்ளது. ஊடக வெளிச்சமும் , சமூக கவனமும் பெறுகின்ற மரணங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படுகிறது. மற்றவற்றுக்கு சொற்பம் தான்.பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இதயநோய் , இரத்த அழுத்தம் , புற்றுநோய் மற்றும் வேறுவிமான நோய்களின் காரணமாக நிகழும் திடீர் மரணங்களுக்கு கூட இழப்பீடு வழங்கப்படுவதில்லை. எதிலாவது அடிபட்டு துடிதுடித்து நிகழும் மரணங்கள் மட்டுமே இழப்பீட்டுக்குத் தகுதியுள்ளவை என்று எப்படி முடிவு செய்கிறார்கள் , நம் ஆட்சியாளர்கள்.முட்டாள்கள். இழப்பு என்பது எல்லோருக்கும் பொது தானே.

விமான விபத்தால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , ரோட்டில் அடிபட்டதால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , போராட்டத்தால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , குண்டடி பட்டதால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , மற்ற தீடீர் மரணங்களுக்கு எந்த விலையுமில்லை. இங்கு நிகழும் மனிதர்களின் மரணங்கள் ஒரே மாதிரியாக மதிப்பிடப்படுவதில்லை ;ஒரே மாதிரியான விலையும் நிர்ணயிக்கப்படுவதில்லை. பல மரணங்களுக்கு விலையே கிடைப்பதில்லை.  " மரணத்தின் முன்  எல்லோரும் சமம் " என்று இனியும் சொல்ல முடியுமா ?

நம் நவீன வாழ்வில் மரணத்திற்கும் சமமில்லாத விலை உண்டு . விலையில்லா மரணங்களுக்கும் இடமுண்டு . ஆனாலும் மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயம் என்று மட்டும் இயற்கை சொல்கிறது !

மேலும் படிக்க :

கதாநாயகத் துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் !

போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !
....................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms