Friday, March 18, 2011

கட்சி அரசியலை வேரறுப்போம் !


சிதறி கிடந்த மக்களை ஒன்றுபடுத்த அன்று கட்சி ஆரம்பிக்கப்பட்டது . ஆனால் இன்று அந்த கட்சி தான் மக்களைப் பிரிக்கிறது . நமது நாடு பாரம்பரியமானது . பல்வேறு விதமான கலாச்சாரங்கள் பின்பற்றப் படுகின்றன . பல்வேறு விதமான மொழிகள் பேசப் படுகின்றன . பல்வேறு விதமான மதங்கள் பின்பற்றப் படுகின்றன . இப்படி எத்தனையோ பேதங்கள் இருந்தாலும் நாம் அனைவரும் மனிதர்கள் . ஆனால் நம் ஒற்றுமையை கட்சி பேதங்கள் அசைத்துப் பார்க்கிறது .

 மக்கள் நலன் சார்ந்த அரசியல் அழிந்து வருகிறது . கட்சி நலன் சார்ந்த அரசியல் வளர்ந்து வருகிறது . இன்று இருக்கும் அரசியல் தலைவர்கள் மக்களைப் பற்றியோ ,மக்கள் நலன் சார்ந்தோ சிந்திப்பதில்லை . கட்சி நலன் சார்ந்து , கட்சியை எப்படி வளர்ப்பது ? ஆட்சியை எப்படி பிடிப்பது ? பதவிகளை எப்படி கைப்பற்றுவது ? என்று தான் சிந்திக்கின்றனர் . இதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள், இன்றைய அரசியல்வாதிகள் . ஒரு சிலர் மட்டுமே மக்கள் நலன் சார்ந்தும் , ஒட்டு மொத்த முன்னேற்றம் சார்ந்தும் சிந்திகின்றனர் , செயல்படுத்துகின்றனர் .

மக்கள் தொடர்ந்து ஏமாற்றப் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் . அரசாட்சி முடிவு பெற்றதாக சொல்லிக்கொண்டாலும் இன்றும் அரசாட்சி, நம் ஜனநாயகத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது . அடுத்த கட்ட தலைவர்களும் இளவரசர்கள் போலே உலவுகின்றனர் கட்சியை வளர்க்கும் பணியில் மத்தியிலிருந்து மாவட்டம் வரை . கட்சியை வளர்த்தால் தான் எல்லா இடங்களிலும் ஆட்சியை பிடிக்க முடியுமாம் . ஆட்சியைப் பிடித்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியுமாம் . நன்றாக கதை அளக்கிறார்கள் . நல்லதை இப்போதே செய்ய ஆரம்பித்தால் கட்சி தானாக வளருமே . என்ன கொடுமை இது ?

வியாபார உலகில் இன்று எல்லாம் வியாபாரம் தான் . இதற்கு அரசியலும் விதிவிலக்கல்ல . ஆனால் இது நாட்டுக்கு அழிவைத் தரக்கூடியது . கல்வியும் , அரசியலும் வியாபாரமாவதைத் தடுக்கா விட்டால் நாம் மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும் . பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன . கல்வியையும் , அரசியலையும் விட்டுவிடுங்கள் அவை பிழைத்துக்கொள்ளட்டும் . அற்பணிப்பு  உணர்வும் , சேவை மனப்பான்மையும் உள்ளவர்கள் மட்டுமே கல்வித் துறையிலும் அரசியலிலும் சிறந்து விளங்க முடியும் . அரசியல் வியாபாரத்திலும் இடைத் தரகர்கள் உருவாகி விட்டது           மானக்கேடான விசயம் . இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவது அவசியம் .

மனசாட்சியே இல்லாத மனிதர்களாக அரசியல்வாதிகள் மாறிவிட்டனர் . மக்களின் வரிப் பணத்தில் தான் வாழ்கிறோம் என்பதையே மறந்து விட்டனர் . கட்சித் தலைவர் என்னவோ தன் சொந்த பணத்தில் ஆட்சி நடத்துவது போலவும் இவர்கள் அவர் வழி நடப்பது போலவும் நடந்து கொள்கின்றனர் . மக்களின் வரிப்பணத்தில் தொட்டதுக்கெல்லாம் வெட்கமே இல்லாமல் விளம்பரத்தட்டிகள் (பேனர்கள் ) வைக்கின்றனர் . சம்பந்தமே இல்லாமல் ரெண்டு மைல் தூரத்திற்கு கொடிக்கம்பங்கள் , ஒளிவிளக்குகள் அமைக்கின்றனர் . ஏற்கனவே இருப்பவர்கள் தான் இப்படி என்றால் , புதிதாக வருபவர்களும் பேனர்கள் வைப்பதிலும் , தோரணம் கட்டுவதிலும் தான் ஆர்வம் காட்டுகின்றனர் . அதிக பேனர்கள் வைத்ததை பெருமையாக மேடையில் பேசுகின்றனர் . இவர்கள் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று எப்படி நம்புவது ?

தான் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறான் சாதாரண மனிதன் . இன்று முன்னேற வேண்டுமானால் நீங்கள் அதிக பேரை ஏமாற்ற வேண்டும் . யார் அதிக பேரை ஏமாற்றுகிறாரோ அவரே வெற்றி பெற்றவர் . இங்கே நீங்கள் நீதி , நேர்மை பார்க்கக் கூடாது , பார்த்தால் தோற்று விடுவீர்கள் . நம்மை , நம் இளிச்சவாய்தனத்தை எல்லோரும் நன்கு பயன்படுத்துகின்றனர் . நமக்கு எந்த விதத்திலும் பயன் தராத எத்தனையோ பொருட்களை தினமும் பயன்படுத்துகிறோம் .ஏன் என்று கேட்டால் , உலகமயமாதல் , நாம் வளரும் நாடு ,இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று பதில் வருகிறது .


உலகத்தின் மிகப்பெரிய வியாபாரச் சந்தையாக இந்தியா மாறிவிட்டது . இந்தியாவில் மட்டும் 1,38,73,854 சில்லரை வர்த்தக அங்காடிகள் உள்ளன 2009 ஆம் ஆண்டு கணக்குப்படி . இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவில் உள்ள சில்லரை அங்காடிகளின் எண்ணிக்கை 48,17,367 . வித்தியாசம் இரண்டு மடங்குக்குமேல் ( G.K.Today February 2011) . இவ்வளவுக்கும் இந்தியா ஒரு விவசாய நாடு . 80% மக்கள் விவசாயத்தையும் , விவசாயம் சார்ந்த தொழில்களையும் நம்பி வாழ்கின்றனர் . விவசாயம் சார்ந்த பெரிய திட்டங்கள் இதுவரை செயல்படுத்தவே இல்லை . விவசாயம் தீண்டத்தகாத தொழில் போல் ஆகிவிட்டது . விளைநிலங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விற்கப்படுகின்றன . விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை . உரங்கள் மண் வளத்தைப் பாழ்படுத்தி விட்டன . தொழிற்சாலைக் கழிவுகள் நீர் ஆதாரங்கள் அனைத்தையும் பாதிக்கின்றன . இன்னும் கொஞ்சம் நாட்களில் சோறு கிடைக்காமல் அலையப்போகிறோம் . அப்போதும் எதுவும் பேசாமல் மாத்திரை வடிவில் கிடைக்கப்போகும் உணவை உண்டு மருத்துவமனைகளில் வாழப்போகிறோம் .

பெரும் வணிக நிறுவனங்களின் பிடியில் அரசியலும் , அரசியல்வாதிகளும் உள்ளனர் . தேர்தலுக்கு செலவளிக்கப்படும் பணத்தின் பெரும் பகுதி இந்த வணிக நிறுவனங்களுடையது . இதற்காக அரசு இயந்திரம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் விருப்பம் போல் சுழலும் . வளைந்து கொடுக்கும் . அப்பாவி மக்களைப் அடித்து விரட்டும் . அரசு மானியத்தில் , 24 மணி நேர மின்சார , தண்ணீர் வசதியுடன் , ஊரெங்கும் தொழிற்சாலைகள் அமையும் . தொழிற்சாலைக் கழிவுகள் பக்கத்தில் இருக்கும் அந்தப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் ஆறு அல்லது குளத்தில் கலக்கும் . இதை யாரும் கேட்க மாட்டார்கள் . அவர்கள் பொருட்களை உற்பத்தி செய்து வேண்டுமென்றே அதிக விலை நிர்ணயிப்பார்கள் . உள்நாட்டில் விலை போகாது . ஏற்றுமதி செய்யப்படும் . இவர்களுக்கும் நம்மை அடிமையாக வைத்திருந்த ஆங்கிலேயர்க்கும் பெரிய வித்தியாசமில்லை . தொழிற்சங்கம் என்பதே இல்லாமல் செய்து விட்டனர் . யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டுத் தூக்கலாம் . யாராலும் கேள்வி கேட்க முடியாது . இது தான் இன்றைய நிலை .

நாட்டில் இப்படி எத்தனையோ மக்களைப் பாதிக்கும் விசயங்கள் இருந்தாலும் இங்கு இருக்கும் கோடானகோடி கட்சிகள் கண்டுகொள்வதில்லை . ஆட்சியை பிடிக்கவே போராடுகின்றனர் . மக்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களை தங்கள் ஓட்டு வங்கியாக மாற்றவே முயல்கின்றனர் . இதற்கு ஜாதி , மதம் , சமூகம் என்று பல்வேறு ஆயுதங்களை பயன் படுத்துகின்றனர் . ஜாதி சார்ந்த அரசியல் மீண்டும் தலைதூக்குகிறது . இதை இப்போதே தடுக்க வேண்டும் . ஜாதிப்பேரைச் சொல்லி ஓட்டு கேட்கும் யாருக்கும் ஓட்டுப் போடாதீர்கள் . அப்படிப் போட்டாலும் உங்களுக்கு எந்த நன்மையையும் இல்லை . இதை எல்லாம் விட பெரிய பேதம் கட்சி சார்ந்த பேதம் .

அன்று கட்சித் தலைவர்களை முன்மாதிரியாக கொண்டு கட்சியில் இணைந்தார்கள் . தனது தலைவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற பிம்பத்தில் வாழ்ந்து வந்தார்கள் , வருகிறார்கள் . தனது தலைவரையும் , கட்சியையும் உயிரினும் மேலாக மதித்தான் , இதற்காக மற்றவர்களிடம் சண்டையும் போட்டான் , சாதாரண தொண்டன் . பணம் இறங்கி விளையாட ஆரம்பித்த பிறகு உண்மைத் தொண்டனுக்கு எந்த மதிப்பும் இல்லை . ஆனாலும் விட்டுக்கொடுக்காமல் தான் சார்ந்த கட்சியின் தவறான செயல்பாடுகளுக்குக் கூட எந்த எதிர்ப்பும் காட்டுவதில்லை . இது தான் நம் ஜனநாயகத்தின் பிகப்பெரிய வியாதி .

தப்பு யார் செய்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் . " நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே " வழி வந்தவர்கள் தானே நாம் . தப்பு செய்தவர் தலைவராக இருந்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் . கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் , ஆனால் ஓட்டு மட்டும் எனக்குப் போடுங்கள் , என்று சொல்பவர்களை என்ன செய்வது . நல்ல மக்கள் தலைவராக இருந்தால் ,"யார் கொடுக்கும் பணத்தையும் வாங்காதீர்கள் , உழைத்து சேர்ப்பதுவே நிலைக்காத இந்தக் காலத்தில் உங்களையும் , உங்கள் தன்மானத்தையும் விற்று அந்தப் பணத்தை வாங்காதீர்கள் " என்று தானே சொல்ல வேண்டும் . ஆதலால் , மக்களே , மக்களுக்கு மக்களே ஏமாந்து விடாதீர்கள் .

"ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் " என்ன கொடுமை இது . ஏழைகளையும் , அவர்களின் படிப்பறிவின்மையயும் தங்களது ஓட்டு வாங்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றனர் . ஆட்சியாளர்கள் நினைத்தால் ஏழைகளே இல்லாமல் செய்ய முடியும் . எல்லோருக்கும் முழுமையான படிப்பறிவைக் கொடுக்க முடியும் . ஆனால் ,செய்ய மாட்டார்கள் . அப்படிச் செய்தால் இவர்கள் ஏமாற்றுவதற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் .

யார் ஆட்சிக்கு வந்தாலும் கட்சியின் பேரைச்சொல்லி, கட்சியில் உள்ள முக்கியப்புள்ளிகளின் பேரைப் பயன்படுத்தி வார்டு முதல் வட்டம் , மாவட்டம் , மாநகராட்சி வரை ஏகப்பட்ட அடாவடிகளும் , அட்டூழியங்களும் தினமும் நடந்தேறுகின்றன . நிலத்தை மிரட்டி எழுதி வாங்குவது , கட்டப்பஞ்சாயத்து செய்வது , வணிக நிறுவனங்களை  மிரட்டுவது என்று இவர்கள் குட்டி மன்னர்கள் போல்தான் செயல் படுகின்றனர் . இதில் வாரிசு அரசியல் வேறு , தலைவர் முதல் , வார்டு உறுப்பினர் வரை . " ஊருக்கு ஒரு லீடர் , ஆளுக்கொரு கொள்கை , அவனவனுக்கு ஒரு டசன் பட்டினி பட்டாளம் " என்று எம் .ஆர் .ராதா சொன்னது போலத் தான் இன்று வரை நம் நிலை உள்ளது .

இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு . கட்சியை வைத்து உருவாக்கப்படும் பிரிவினைகளை தடுத்து நிறுத்த வேண்டும் . கட்சி நலன் சார்ந்த அரசியலை வளர விடக்கூடாது . மக்கள் நலன் சார்ந்த அரசியலை உருவாக்க வேண்டும் . ஆள்வது யாராக இருந்தாலும் , தப்பு யார் செய்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் . தண்டனை, நாம் கொடுக்காவிட்டாலும் காலம் கொடுக்கும் . நல்லது யார் செய்தாலும் ஆதரிக்க வேண்டும் இதில் ஆளும் கட்சி , எதிர்க்கட்சி என்ற பேதம் இருக்கக் கூடாது . மக்கள் நலன் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும். எல்லோரும் ஒன்று பட்டால்தான் உண்மையான மக்கள் ஆட்சியை மலரச் செய்ய முடியும் . மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் அனைவரையும் தூக்கி எறியுங்கள் . இந்த தேர்தலில் முடியா விட்டாலும் அடுத்த தேர்தலுக்குள் மக்களுக்கான ஆட்சியை உருவாக்க முடியும் .

கட்சியினால் உருவாக்கப்படும் பேதங்களை வேரறுப்போம் !

மக்கள் நலன் சார்ந்த அரசியலை உருவாக்குவோம் !

..........................................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms